சாம்பன் கலக்கம் 4563. | சாம்பன் அவன் ஒன்று உரைசெய்வான், 'எழு சலத்தால், காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன், நாம் புக அமைத்த பொறி நன்று; முடிவு இன்றால்; ஏம்பல் இனி மேலை விதியால் முடியும்' என்றான். |
சாம்பன் அவன் - (அப்பொழுது வீரர்களைப் பார்த்து) சாம்பவான் என்ற கரடிகளுக்கு அரசன்; ஒன்று உரை செய்வான் - ஒன்று சொல்லத் தொடங்கினான்; எழு சலத்தால் - (தன்னிடம் இயல்பாகத்) தோன்றியுள்ள வஞ்சனையால்; காம்பு அனைய தோளியை - இள மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய சீதையை; ஒளித்த - எடுத்துச் சென்று மறைத்து வைத்த; படு கள்வன் - பெருந் திருடனான இராவணன்; நாம் புக அமைத்த - (சீதையைத் தேடி வரும்) நாம் எல்லோரும் அகப்பட்டுத் தவிக்குமாறு செய்துவைத்த; பொறி நன்று - சூழ்ச்சி நன்றாயிருக்கிறது; முடிவு இன்று - (இதற்கு) ஒரு முடிவுமில்லை; ஏம்பல் - (நமக்குள்ள) ஊக்கமும்; இனி மேலை விதியால் முடியும் - இனிமேல் முற்பிறப்பில் செய்த தீவினையால் நீங்கிவிடும்; என்றான் - என்று வருந்திக் கூறினான். 'சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன் அச்சீதையைத் தேடிவருபவர் தன்னிடம் வராதபடி வஞ்சனையால் செய்த குழியாகும் இது; நாம் இதில் சிக்கிக் கொண்டமையால் இனி நமக்கு உய்வில்லை; இதில் அழிந்து ஒழிவதே விதி' என்றான் சாம்பான். சலம்: வஞ்சனை. படு கள்வன்: மிகுதியான திறனும் கொடுமையும் வாய்ந்த திருடன். அறிவு இங்கே சூழ்ச்சி என்ற கருத்தில் வந்தது. 43 |