பில நகரின் நடுவில் சுயம்பிரபை 4565. | மற்றவரும் மற்று அது மனக் கொள வலித்தார்; உற்றனர், புரத்தின் இடை; ஒண் சுடரினுள் ஓர் நல் தவம் அனைத்தும் உரு நண்ணி, ஒளி பெற்ற கற்றை விரி பொன் சடையினாளை எதிர் கண்டார். |
மற்றவரும் - (அங்கதன் முதலிய) மற்றை வானர வீரர்களும்; அது மனக் கொள - (அனுமன் கூறிய) அந்தச் சொல் மனத்தில் பதியவே; வலித்தார் - (அவ்வாறே செய்ய) உறுதி கொண்டார்கள்; புரத்தின் இடை உற்றனர் - (யாவரும்) அந்த நகரத்தினிடையே சென்று; ஒண் சுடரினுள் - மிக்க ஒளியையுடைய (அந்நகரின்) நடுவில்; நல்தவம் அனைத்தும் - சிறந்த தவம் முழுவதும்; ஓர் உரு நண்ணி - ஒரு பெண்ணுருவம் பெற்றாற்போல; ஒளி பெற்ற - ஒளி நிறைந்த; கற்றை விரி பொன் சடையினாளை - தொகுதியயக விரிந்த அழகிய சடையையுடையவளான சுயம்பிரபையை; எதிர் கண்டார் - கண்முன்னே கண்டார்கள். மற்று : அசை. அந்த நகரத்தின் இடையில் தவம் ஓர் உருவம் எடுத்துவந்தாற் போன்ற சுயம்பிரபையை வானரவீரர்கள் கண்டனர் என்பது. 45 |