4566. | மருங்கு அலச வற்கலை வரிந்து, வரி வாளம் பொரும், கலசம் ஒக்கும், முலை மாசு புடை பூசி, பெருங் கலை மதித் திரு முகத்த பிறழ் செங் கேழ்க் கருங் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண, |
மருங்கு அலச வற்கலை வரிந்து - இடையிலே அலையுமாறு மர வுரியைக் கட்டி; வரிவாளம் பொரும் - இரேகைகளையுடைய சக்கரவாகப் பறவையைப் போன்றனவும்; கலசம் ஒக்கும் - பொற்கலசங்களை ஒப்பனவுமான; முலை புடை மாசு பூசி - முலைகளின் மேல் அழுக்குப் படியப்பெற்றும்; பெருங் கலைமதி திருமுகத்த - பெருமை மிக்க பதினாறு கலைகளும் நிரம்பிய முழுமதியை யொத்த அழகிய முகத்தில்; பிறழ் செங்கேழ் - பிறழுகின்ற செந்நிறத்தையுடையனவும்; கருங்கயல்களின் பிறழ்- கருமையான கெண்டை மீன்களைப் போலப் பிறழ்வனவுமான; கண் மூக்கின் நுதி காண - தன் விழிகள் இரண்டும் மூக்கின் நுனியை நோக்கியவாறு இருக்கவும். சுயம்பிரபை மரவுரி தரித்து நீராடவும் செய்யாமல் தவத்திலேயே மனத்தைச் செலுத்தியிருந்தமையால் முலைகளில் அழுக்குப் படியத் தன் கண்களின் பார்வையை மூக்கின் நுனியிலே செலுத்தியிருந்தாள் என்பது. வற்கலை - பூர்சமென்னும் மரத்திலிருந்து உரித்தெடுக்கப்படும் மெல்லிய பட்டையான ஆடை. இப்பாடலிலுள்ள வரிந்து, பூசி, நாண என்ற வினையெச்சங்களும் அடுத்த மூன்று பாடல்களின் வினையெச்சங்களும் 50 ஆம் பாடலில் வரும் 'இருந்தனள்' என்ற வினை கொண்டு முடியும். வரிதல் : இறுகவுடுத்தல். வானம்: சக்கரவாளம் என்னும் பறவை; உருண்டை வடிவால் முலைகளுக்கு உவமை. 46 |