சுயம்பிரபையைச் சீதையோ என ஐயுறுதல் 4570. | இருந்தனள் - இருந்தவளை எய்தினர் இறைஞ்சா, அருந்ததி எனத் தகைய சீதை அவளாகப் பரிந்தனர்; பதைத்தனர்; 'பணித்த குறி, பண்பின் தெரிந்து உணர்தி; மற்று இவள்கொல், தேவி?' எனலோடும், |
இருந்தனள் - (அவ்வாறு) இருந்தாள்; இருந்தவளை - அப்படி வீற்றிருந்த சுயம்பிரபையை வானரவீரர்கள்; எய்தினர் இறைஞ்சா - அணுகி வணங்கி; அருந்ததி எனத்தகைய சீதை அவளாக - அருந்ததி யென்று சொல்லத் தகுந்த கற்புடைய சீதையாகவே நினைத்து; பரிந்தனர் - (அவளிடம்) அன்பு பூண்டனர்; பதைத்தனர் - பரபரப்பு அடைந்தனர்; இவள் தேவி கொல் - (அனுமனைப் பார்த்து) இவள் சீதைதானா? பணித்த குறி - (இராமன்) கூறிய அங்க அடையாளங்களைக் கொண்டு; பண்பில் தெரிந்து உணர்தி - முறையாக ஆராய்ந்து தெளிந்து அறிவாயாக; எனலோடும் - என்றுகேட்ட அளவில். மாருதி உரைத்தான் என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும். முன்னர் நகரையும், மாளிகையையும், குகையையும் கண்டு இராவணன் சீதையை ஒளித்த இடம் இவையோயென ஐயுற்ற வீரர்கள் இங்கும் சுயம்பிரபையின் அழகைக் கண்டு அவளைச் சீதையென மயங்கினர் என்பது. சீதையவள்: அவள் - பகுதிப் பொருள் விகுதி. அருந்ததி: வசிட்டரின் மனைவி; கற்புடைப் பெண்களுக்கு உவமை கூறப்படுபவள். இறைஞ்சா: செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். 50 |