சுயம்பிரபையைச் சீதையோ என ஐயுறுதல்

4570.இருந்தனள் - இருந்தவளை
      எய்தினர் இறைஞ்சா,
அருந்ததி எனத் தகைய
      சீதை அவளாகப்
பரிந்தனர்; பதைத்தனர்; 'பணித்த
      குறி, பண்பின்
தெரிந்து உணர்தி; மற்று
      இவள்கொல், தேவி?' எனலோடும்,

     இருந்தனள் - (அவ்வாறு) இருந்தாள்; இருந்தவளை - அப்படி
வீற்றிருந்த சுயம்பிரபையை வானரவீரர்கள்; எய்தினர் இறைஞ்சா - அணுகி
வணங்கி; அருந்ததி எனத்தகைய சீதை அவளாக - அருந்ததி யென்று
சொல்லத் தகுந்த கற்புடைய சீதையாகவே நினைத்து; பரிந்தனர் - (அவளிடம்)
அன்பு பூண்டனர்; பதைத்தனர் - பரபரப்பு அடைந்தனர்; இவள் தேவி
கொல் -
(அனுமனைப் பார்த்து) இவள் சீதைதானா? பணித்த குறி -
(இராமன்) கூறிய அங்க அடையாளங்களைக் கொண்டு; பண்பில் தெரிந்து
உணர்தி -
முறையாக ஆராய்ந்து தெளிந்து அறிவாயாக; எனலோடும் -
என்றுகேட்ட அளவில்.

     மாருதி உரைத்தான் என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.
முன்னர் நகரையும், மாளிகையையும், குகையையும் கண்டு இராவணன்
சீதையை ஒளித்த இடம் இவையோயென ஐயுற்ற வீரர்கள் இங்கும்
சுயம்பிரபையின் அழகைக் கண்டு அவளைச் சீதையென மயங்கினர் என்பது.
சீதையவள்: அவள் - பகுதிப் பொருள் விகுதி.  அருந்ததி: வசிட்டரின்
மனைவி; கற்புடைப் பெண்களுக்கு உவமை கூறப்படுபவள்.  இறைஞ்சா:
செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.                      50