4571. | 'எக் குறியொடு எக் குணம் எடுத்து இவண் உரைக்கேன்? இக் குறியுடைக் கொடி இராமன் மனையாளோ? அக்கு வடம், முத்தமணி ஆரம்அதன் நேர் நின்று ஒக்கும்எனின், ஒக்கும்' என, மாருதி உரைத்தான். |
மாருதி - அனுமன் (அந்த வீரர்களை நோக்கி); எக்குறியொடு எக்குணம் - (சீதைக்குரிய உறுப்பிலக்கணங்களிலும் குணங்களிலும்) எந்த அடையாளத்தை அல்லது எந்தக் குணத்தை; இவண் எடுத்து இசைக்கேன் - இவளிடம் இருப்பதாக எடுத்துச் சொல்வேன்? இக்குறி யுடைக்கொடி - இத்தன்மையுடைய கொடிபோன்ற இப்பெண்; இராமன் மனையாளோ - இராமன் மனைவியாவாளோ? (ஆகமாட்டாள்); அக்கு வடம்- எலும்பு மாலையானது; முத்த மணி ஆரம் - (நவமணிகளில் ஒன்றான)முத்தினால் ஆகிய மாலையோடு; அதன் நேர் நின்று ஒக்கும் எனின் - நேராக இருந்து உவமையாகுமானால்; ஒக்கும் - (இவளும் அச்சீதையை)ஒத்திருப்பாள்; என உரைத்தான் - என்று கூறினான். இராமன் தன்னிடம் கூறிய சீதையின் குணம், குறிகள் ஒன்றும் இவளிடம் இல்லை; ஆதலால், இவள் சீதையில்லையென அனுமன் துணிந்து கூறினான் என்பது. எலும்பு மாலைக்கும், முத்து மாலைக்கும் எந்த அளவு வேறுபாடுண்டோ, அந்த அளவு வேறுபாடு இவளுக்கும் சீதைக்கும் உண்டென்பது. அக்கு வடம்: சங்கு மணி மாலை என்றும் கொள்ளலாம். கொடி: உவமையாகுபெயர். இந்தப் பெண்ணும் சீதையும் ஒப்பாகார் என்பதற்கு அக்குமாலையும் முத்துமாலையும் ஒன்றையொன்று ஒக்குமென்று கூறியதால் பொய்த் தற்குறிப்பணி. 51 |