4574. | என்றலும், இருந்தவள் எழுந்தனள், இரங்கி, குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள்; நன்று வரவு ஆக! நடனம் புரிவல்' என்னா, நின்றனள்; நெடுங் கண் இணை நீர் கலுழி கொள்ள, |
என்றலும் - என்று வானரர் கூறியவுடனே; இருந்தவள் - வீற்றிருந்தவளாகிய அந்தச் சுயம்பிரபை; எழுந்தனள் - எழுந்துநின்று; இரங்கி - (அந்த இராமதூதரிடம்) அன்பு கொண்டு; குன்று அனையது ஆயது - மலையையொத்ததாகிய; ஒரு பேர் உவகை கொண்டாள் - ஒப்பற்ற பெரு மகிழ்ச்சியையடைந்தாள்; வரவு நன்று ஆக - (வானரர் களைப் பார்த்து) உங்கள் வரவு நல்வரவு ஆகுக; நடனம் புரிவல் - ஆனந்தக் கூத்தாடுவேன்; என்னா - என்று சொல்லி; நெடுங்கண் இணை - (தன்) நீண்ட இரு கண்களிலிருந்தும்; நீர் கலுழி கொள்ள - ஆனந்தக் கண்ணீர் வெள்ளமாகப் பெருக; நின்றனள் - நின்றாள். இந்த வானரவீரர்களை இராமதூதர் என்று அறிந்தவுடன் சுயம்பிரபை தனது சாபம் நீங்குங்காலம் நெருங்கியதென்ற காரணத்தால் அவர்கள்மீது அன்பு பாராட்டி, வரவு கேட்டறிந்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிய மகிழ்ச்சியால் நடனம் செய்யலானாள் என்பது. மகிழ்ச்சி மிகுதிக்குக் குன்று உவமை; உருவத்திற்குக் கூறப்படும் உவமை இங்கு எல்லையற்ற மகிழ்ச்சியான உணர்ச்சிக்காயிற்று. 54 |