4574. என்றலும், இருந்தவள்
      எழுந்தனள், இரங்கி,
குன்று அனையது ஆயது ஒரு
      பேர் உவகை கொண்டாள்;
நன்று வரவு ஆக!
      நடனம் புரிவல்' என்னா,
நின்றனள்; நெடுங் கண் இணை
      நீர் கலுழி கொள்ள,

     என்றலும் - என்று வானரர் கூறியவுடனே; இருந்தவள் -
வீற்றிருந்தவளாகிய அந்தச் சுயம்பிரபை; எழுந்தனள் - எழுந்துநின்று; இரங்கி
-
(அந்த இராமதூதரிடம்) அன்பு கொண்டு; குன்று அனையது ஆயது -
மலையையொத்ததாகிய; ஒரு பேர் உவகை கொண்டாள் - ஒப்பற்ற பெரு
மகிழ்ச்சியையடைந்தாள்; வரவு நன்று ஆக - (வானரர் களைப் பார்த்து)
உங்கள் வரவு நல்வரவு ஆகுக; நடனம் புரிவல் - ஆனந்தக் கூத்தாடுவேன்;
என்னா -
என்று சொல்லி; நெடுங்கண் இணை - (தன்) நீண்ட இரு
கண்களிலிருந்தும்; நீர் கலுழி கொள்ள - ஆனந்தக் கண்ணீர் வெள்ளமாகப்
பெருக; நின்றனள் - நின்றாள்.

     இந்த வானரவீரர்களை இராமதூதர் என்று அறிந்தவுடன் சுயம்பிரபை
தனது சாபம் நீங்குங்காலம் நெருங்கியதென்ற காரணத்தால் அவர்கள்மீது
அன்பு பாராட்டி, வரவு கேட்டறிந்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிய
மகிழ்ச்சியால் நடனம் செய்யலானாள் என்பது.

     மகிழ்ச்சி மிகுதிக்குக் குன்று உவமை; உருவத்திற்குக் கூறப்படும் உவமை
இங்கு எல்லையற்ற மகிழ்ச்சியான உணர்ச்சிக்காயிற்று.                  54