இராமபிரான் பற்றிச் சுயம்பிரபை கேட்க,அனுமன் விடை பகர்தல்

4575.'எவ் உழை இருந்தனன்
      இராமன்?' என, யாணர்ச்
செவ் உழை நெடுங்
      கண் அவள் செப்பிடுதலோடும்,
அவ் உழை, நிகழ்ந்ததனை
      ஆதியினொடு அந்தம்,
வெவ் விழைவு இல் சிந்தை
      நெடு மாருதி விரித்தான்.

     இராமன் - இராமபிரான்; எவ் உழை இருந்தனன் - எவ்விடத்தில்
இருக்கின்றான்?என- என்று; யாணர்ச் செவ் உழை - புதுமையான அழகிய
மான்போன்ற; நெடுங் கண்ணவள் - நீண்ட கண்களையுடைய அந்தச்
சுயம்பிரபை; செப்பிடுதலோடும் - (அனுமனை நோக்கிக்) கேட்டவுடனே;
வெவ் விழைவு இல் -
கொடிய ஆசையில்லாத; சிந்தை நெடு மாருதி -
மனத்தையுடைய பெருமை வாய்ந்த அனுமன்; அவ்உழை நிகழ்ந்ததனை -
அங்கு (இராமனிடத்து) நிகழ்ந்த செய்திகளை; ஆதியினொடு அந்தம்
விரித்தான் -
முதலிலிருந்து முடிவுவரை விரித்துச் சொன்னான்.

     ஆசையென்பது நல்வழியிற் செல்லவொட்டாது மனத்தைத் தீயவழியிற்
புகுத்தலால் 'வெவ் விழைவு' எனப்பட்டது.                         55