இராமபிரான் பற்றிச் சுயம்பிரபை கேட்க,அனுமன் விடை பகர்தல் 4575. | 'எவ் உழை இருந்தனன் இராமன்?' என, யாணர்ச் செவ் உழை நெடுங் கண் அவள் செப்பிடுதலோடும், அவ் உழை, நிகழ்ந்ததனை ஆதியினொடு அந்தம், வெவ் விழைவு இல் சிந்தை நெடு மாருதி விரித்தான். |
இராமன் - இராமபிரான்; எவ் உழை இருந்தனன் - எவ்விடத்தில் இருக்கின்றான்?என- என்று; யாணர்ச் செவ் உழை - புதுமையான அழகிய மான்போன்ற; நெடுங் கண்ணவள் - நீண்ட கண்களையுடைய அந்தச் சுயம்பிரபை; செப்பிடுதலோடும் - (அனுமனை நோக்கிக்) கேட்டவுடனே; வெவ் விழைவு இல் - கொடிய ஆசையில்லாத; சிந்தை நெடு மாருதி - மனத்தையுடைய பெருமை வாய்ந்த அனுமன்; அவ்உழை நிகழ்ந்ததனை - அங்கு (இராமனிடத்து) நிகழ்ந்த செய்திகளை; ஆதியினொடு அந்தம் விரித்தான் - முதலிலிருந்து முடிவுவரை விரித்துச் சொன்னான். ஆசையென்பது நல்வழியிற் செல்லவொட்டாது மனத்தைத் தீயவழியிற் புகுத்தலால் 'வெவ் விழைவு' எனப்பட்டது. 55 |