4577.மாருதியும், மற்று அவள்
      மலர்ச்சரண் வணங்கி,
'யார் இந் நகருக்கு இறைவர்?
      யாது நின் இயற் பேர்?
பார் புகழ் தவத்தினை!
      பணித்தருள்க!' என்றாள்;
சோர்குழலும், மற்று அவனொடு,
      உற்றபடி சொன்னாள்;

     மாருதியும் - அனுமனும்; அவள் மலர் சரண் வணங்கி - அந்தச்
சுயம்பிரபையின் தாமரைமலர் போன்ற அடியிணைகளைத் தொழுது; யார்
இந்நகருக்கு இறைவர் -
இந்த நகரத்துக்குத் தலைவர் யார்? நின் இயற்
பேர் யாது -
உனது இயற்கையான பெயர் என்ன?பார் புகழ் தவத்தினை -
உலகத்தவர் புகழ்வதற்குக் காரணமான தவம் மேற்கொண்டவளே! பணித்து
அருளுக -
(இவற்றைச்) சொல்வாயாக; என்றான் - என்று கேட்டான்;
சோர்குழலும் -
(சடைபட்டுத்) தொங்கும் கூந்தலையுடைய அந்தச்
சுயம்பிரபையும்; அவனோடு - அந்த அனுமனிடம்; உற்றபடி சொன்னாள் -
நடந்தவற்றை நடந்தபடியே கூறலாயினாள்.

     பணித்துஅருள்க என்ற தொடரில் அனுமனின் பணிபு புலப்படுதல்
காண்க.  எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (125) பணிவுடையன் இன்சொலன்
ஆதல் (95) என்ற குறள் தொடர்களுக்கு அனுமன் இலக்கியம் ஆவான்.
சோர்குழல்: வினைத் தொகையன்மொழி. 'மற்று' இரண்டும்அசைகள்.    57