4580.'புணர்ந்து, அவளும் அன்னவனும்,
      அன்றில் விழை போகத்து
உணர்ந்திலர், நெடும் பகல் இம்
      மா நகர் உறைந்தார்;
கணங் குழையினாளொடு உயர்
      காதல் ஒருவாது உற்று,
இணங்கி வரு பாசமுடையேன்
      உடன் இருந்தேன்.

     அவளும் அன்னவனும் - அந்தத் தேவமாதும், அந்த மயனும்;
புணர்ந்து -
கூடி (இன்பம் துய்த்து); அன்றில் விழை போகத்து - அன்றில்
பறவையும் விரும்பும்படியான சிற்றின்பத்தில்; உணர்ந்திலர் -
(வேறொன்றையும்) அறியாதவர்களாய்; நெடும்பகல் இம்மாநகர் - பலகாலம்
இந்தப் பெரிய நகரத்தில்; உறைந்தார் - வசித்தார்கள்;
கணங்குழையினாளொடு -
திரண்ட காதணி பூண்ட அப் பெண்ணுடன்; உயர்
காதல் ஒருவாது -
சிறந்த அன்பு நீங்காது; உற்று இணங்கி வரு -
நெருங்கிப் பழகி வருகின்ற; பாசம் உடையேன் - பாசமுடையவளாகிய நான்;
உடன் இருந்தேன் -
அந்தப் பெண்ணோடு இங்கேயே இருந்துவிட்டேன்.

     மயனும், தேவமாதும் சிற்றின்பத்தில் மூழ்கி இங்கு வசிக்குங் காலத்தில்
என் உயிர்த்தோழியான அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் நானும்
அவளுடன் இருந்தேன் என்றாள் சுயம்பிரபை.  பகல்: நாள்கள் - இலக்கணை.
காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பமாதலின் 'உயர் காதல்'
எனப்பட்டது.                                             60