4582.'முனிந்து, அவளை, ''உற்ற செயல்
     முற்றும் மொழிக'' என்ன,
கனிந்த துவர் வாயவளும்
      என்னை, ''இவள்கண் ஆய்,
வனைந்து முடிவுற்றது'' என,
      மன்னனும், இது எல்லாம்
நினைந்து, ''இவண் இருத்தி; நகர்
     காவல் நின்னது'' என்றான்.

     அவளை முனிந்து - (அந்தத் தேவமாதை இந்திரன்) அவ்வாறு
கோபித்து; உற்ற செயல் முற்றும் மொழிக - நடந்த நிகழ்ச்சிகள்
அனைத்தையும் கூறுக; என்ன - என்று கட்டளையிட; கனிந்த துவர்
வாயவளும் -
நன்றாக முற்றிய பவழம்போன்ற இதழையுடைய அந்த
ஏமையும்; என்னை - என்னைப் பற்றிக் கொண்டு; இவள் கண்ணாய்
வனைந்து -
இவளால் (இப்பழிப்புச் செயல்) தொடுக்கப்பட்டு; முடிவுற்றது
என -
முடிந்ததெனத் தெரிவிக்க; மன்னனும் - இந்திரனும்; இது எல்லாம்
நினைந்து -
இவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து (என்னைப் பார்த்து);
இவண் இருத்தி -
இந்த நகரிலேயே (தனியாக) தங்குவாய்; நகர் காவல்
நினது -
நகரத்தைப் பாதுகாக்கும் வேலை உன்னுடையது; என்றான் - என்று
கூறினான்.

     நடந்த செயலை என் தோழியாலறிந்த இந்திரன் எல்லாவற்றிற்கும் முதற்
காரணம் நானே எனத் தெளிந்து என்மீதுள்ள கோபத்தால் ஒருவருமில்லாத
இந்த நகரத்தைப் பாதுகாத்துத் தனியே இருக்குமாறு கட்டளையிட்டான்
என்பது.  மன்னன்: இந்திரன். 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' - தொல்.
பொருள்.                                                   5.62