4585.'ஐ - இருபது ஓசனை
      அமைந்த பிலம், ஐயா!
மெய் உளது; மேல் உலகம்
      ஏறும் நெறி காணேன்;
உய்யும் நெறி உண்டு,
      உதவுவீர்எனின்; உபாயம்
செய்யும்வகை சிந்தையில்நினைத்திர்,
      சிறிது' என்றாள்.

     ஐயா - பெரியவனே! அமைந்த பிலம் - பொருந்திய இக் குகைத்
துவாரமானது; ஐ இருபது ஓசனை மெய் உளது - நூறு யோசனை விரிந்த
வடிவு கொண்டது; மேல் உலகம் ஏறு நெறி காணேன் - வானுலகத்திற்கு
ஏறிச் செல்லும் வழியை அறியேன்; உதவுவீர் எனின் - (நீங்கள் எனக்கு)
உதவி செய்வீர்களென்றால்; உய்யும் நெறி உண்டு - (நான்) ஈடேறுவதற்கு
வழிஏற்படும்; உபாயம் செய்யும் வகை - அதற்கான உபாயம் செய்யும்
விதத்தை; சிந்தையில் சிறிது நினைத்திர் - உங்கள் மனத்தில் சிறிது
கருதுங்கள்; என்றாள் - என்று கூறினாள் (சுயம்பிரபை).

     இந்தப் பிலம் நூறு யோசனை பரப்புள்ளதாய் இருள் அடர்ந்திருப்பதால்
மேலே ஏறிச் செல்லும்வழி இதுவென் தெரியாதபடி இந்திரனது சாபம்
என்னைத் தடை செய்கிறது; என் சாபவிடைக் காலம் குறுகி உங்கள்
வருகையால் நான் ஈடேறும் வகையும் உள்ளது.  ஆதலால், அவ்வாறான
உபாயத்தைச் செய்ய வேண்டுமென்று அனுமன் முதலியோரைச் சுயம்பிரபை
வேண்டினான் என்பது.                                         65