4590. | மா வடிவுடைக் கமல நான்முகன் வகுக்கும் தூ வடிவுடைச் சுடர் கொள் விண் தலை தொளைக்கும் மூஅடி குறித்து முறை ஈர் - அடி முடித்தான் பூ வடிவுடைப் பொரு இல் சேவடி புரைந்தான். * |
மா வடிவுடைக் கமல நான்முகன் - சிறந்த வடிவமுடைய (திருமா லின்) நாபிக் கமலத்தில் உதித்த பிரமன்; வகுக்கும் - படைத்துள்ள; தூ வடிவுடை - தூய்மையான தோற்றமுடைய; சுடர் கொள் விண் - (சூரியன் முதலிய) சுடர்களைத் தன்னிடம் கொண்ட ஆகாயத்தினது; தலை - உச்சிமுகட்டை; தொளைக்கும் - துளைத்து ஊடுருவிச் சென்றதாகிய; மூ அடி குறித்து முறை ஈர்அடி முடித்தான் - (வாமனனாகி மகாபலியிடம்) மூன்றடி மண் இரந்து பெற்று, உடனே முறையாக (வானம் பூமி என்ற இரண்டையும்) தன் இரண்டடிகளால் அளந்து நின்ற (திரிவிக்கிரமனான) திருமாலின்; பூ வடிவுடை - அழகிய வடிவையுடைய; பொருவு இல் சேவடி - ஒப்பற்ற சிவந்த திருவடிகளை; புரைந்தான் - ஒத்து விளங்கினான். இப்பாட்டில் திருமாலின் திரிவிக்கிரமாவதாரத்தை ஒப்பாகக் கூறினார். மாவலியிடம் மூவடி மண் வேண்டி ஈரடிகளால் மண்ணும் விண்ணும் அளந்த வரலாறு இங்கே குறிக்கப்பட்டுள்ளது. தூவடிவுடைச் சுடர்கொள்விண்: நிர்மலமானதும், சூரிய சந்திரர்களான சுடர்கள் சஞ்சரிக்கப் பெற்றதுமான ஆகாயம். புரைதல்: ஒத்தல். அனுமனுக்குத் 'திருவடி' என்ற பெயர் உண்டாதலால் இங்கு வேறு வகையாகத் திருமாலின் சேவடி போன்றவன் என்று நயம்படி உரைத்தார் என நயம் காண்பர். 70 |