சுயம்பிரபை பொன்னுலகம் செல்லுதல் 4592. | இன்றும் உள மேல் கடல் இயக்கு இல் பில தீவா நின்று, நிலைபெற்றுள்ளது; நீள் நுதலியோடும், குன்று புரை தோளவர், எழுந்து நெறி கொண்டார்; பொன் திணி விசும்பினிடை நல் நுதலி போனாள். |
இன்றும் உள - (அனுமனால் எறியப்பட்ட அந்தப் பிலநகரம்) இப்பொழுதும் உள்ளதான; மேல்கடல் - மேற்குத்திசைக் கடலில்; இயக்கு இல் பில தீவா - அழிவில்லாத பிலத்தீவென்று பெயருள்ளதாக; நின்று நிலை பெற்றுளது - இப்பொழுதும் உள்ளதாகி நிலைபெற்று விளங்குகின்றது; நீள் நுதலியோடும் - நீண்ட நெற்றியையுடைய சுயம்பிரபையோடும்; குன்று புரை தோளவர் - மலைகளைப் போன்ற தோள்களையுடைய வானர வீரர்கள்; எழுந்து - (அந்தப் பிலத்திலிருந்து) வெளியேறி; நெறி கொண்டார் - (தாம் செல்வதற்கான) வழியை அடைந்தார்கள் (அப்பொழுது; நல் நுதலி - அழகிய நெற்றியைக் கொண்ட அச் சுயம்பிரபை; பொன்திணி விசும்பினிடை போனாள் - பொன்னாலியன்ற தேவலோகத்திற்குச் சென்றாள். விசும்பு: இடவாகுபெயர். வானர வீரர்கள் சீதையை நாடிச் செல்லும் போது இளைத்துக் களைத்து, நீர்வேட்கை மிக்கவராய், ருட்சபிலம் என்னும் பிலத்துள் புகுந்து மிகவும் வருந்தி உள்ளே சென்று, பொன்மயமான ஒரு வனத்தையடைந்து அங்கிருந்த சுயம்பிரபை யென்னும் தவமுதியவளைக் கண்டு வினவி, அந்தவனம் மயன் என்பவனால் உருவாக்கப்பட்ட தென்றும், அவன் காதலுக்குப் பாத்திரமான ஏமை என்னும் தேவமகளுக்கு உரித்தாயிற்றென்றும் அறிந்தபின், தங்களை அப் பிலத்திலிருந்து வெளியேற்றுமாறு அந்தச் சுயம்பிரபையை வேண்ட அவளோ இவர்களின் கண்களை மூடிக் கொள்ளுமாறு கூறித் தன் தவப் பெருமையால் பிலத்தின் வெளியே கொண்டு வந்து சேர்த்தாள் என்று வான்மீகம் கூறும். வானரர் விடுதலை பெறச் சுயம்பிரபை உதவினாள், என முதல்நூல் கூறியிருப்ப, அவளுக்கும் சேர்ந்து விடுதலை அருளியவன் அனுமனே எனக் கம்பர் மாற்றியிருக்கிறார். மாற்றத்தால் அனுமன் பெருமை மிகுவதை உணர்க. 72 |