பொய்கைக் கரையில் வானரர் உறங்கும்போது துமிரன் வருதல் கலித்துறை 4594. | கண்டார், பொய்கைக் கண் அகல் நல் நீரைக் கரை தாம் உற்று, உண்டார், தேனும் ஒண் கனி காயும்; ஒரு சூழல், கொண்டார் அன்றோ, இன்துயில்; கொண்ட குறி உன்னி, தண்டா வென்றித் தானவன் வந்தான், தகவு இல்லான். |
கண்டார் - (அப் பொய்கையைக்) கண்ட வானரவீரர்கள்; பொய் கைக் கண் - அந்தப் பொய்கையிலுள்ள; அகல்நீர்க் கரைதாம் உற்று - நீர்வளமுள்ள அகன்ற கரையையடைந்து; தேனும் ஒண்கனி காயும் உண்டார் - தேனையும் நல்ல பழங்களையும் காய்களையும் தின்றார்கள்; ஒரு சூழல் - அப் பொய்கையின் ஒரு பக்கத்தில்; இன்துயில் கொண்டார் - இனிய உறக்கத்தை மேற்கொண்டார்கள்; கொண்ட குறி உன்னி - (அவ்வாறு வானரர்கள் வந்து) படுத்துறங்குவதை அறிந்து; தண்டா வென்றி - குறையாத வெற்றியையுடைய; தகவு இல்லான் - நற்குணமில்லாத ஓர் அசுரன்; வந்தான் - (அவ் இடத்திற்கு) வரலானான். அன்று, ஓ : அசைகள். வானரவீரர்கள் தாங்கள் வந்து சேர்ந்த பொய்கைக் கரையிலே காய் கனி முதலியவற்றைத் தின்று ஆழ்ந்து உறக்கங் கொள்ள, அப்போது ஓர் அசுரன் அதனை அறிந்து அங்கு வந்தான் என்பது. தாக்குதற்கு ஏற்ற நேரம் எனக் கருதினான், அவ் அரக்கன். தானவர்: அரக்கரின் வேறான அசுரர். இங்குக் கூறப்பெற்ற அசுரன் துமிரன் என்பவன். 1 |