4595. | மலையே போல்வான்; மால் கடல் ஒப்பான்; மறம் முற்ற, கொலையே செய்வான்; கூற்றை நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர் நிலையே போல்வான்; நீர்மை இலாதான்; நிமிர் திங்கட் கலையே போலும் கால எயிற்றான்; கனல் கண்ணான்; |
(அந்த அசுரன்) மலையே போல்வான் - (தோற்றத்தில்) மலையைப் போன்றவன்; மால் கடல் ஒப்பான் - (உருவத்தின் நிறத்தாலும் பரப்பாலும்) பெரிய கரிய கடலைப் போன்றவன்; மறம் முற்ற, கொலையே செய்வான் - கொடுமையில் முதிர்ச்சியடைந்து யாவரையும் கொன்று தீர்ப்பவன்; கூற்றை நிகர்ப்பான் - இயமயையேஒத்திருப்பவன்; கொடுமைக்கு - கொடுமையென்னும் குணத்திற்கு; ஓர் நிலையே போல்வான் - ஓர் இருப்பிடமாவான்; நீர்மை இலாதான் - நற்பண்பு சிறிதும் இல்லாதவன்; நிமிர் - (வானில்) எழுந்து விளங்கும்; திங்கட் கலையே போலும் - சந்திரனின் பிறை போல் விளங்கும்; கால எயிற்றான் - நச்சுப்போன்ற பற்களையுடையவன்; கனல் கண்ணான் - (நெருப்புப் போன்று) கனல் கக்கும் கண்களையுடைவன். அந்த அசுரனின் உருவத்தின் வலிமை உயர்வு முதலியவற்றிற்கு மலையும், நிறம், பெருமை விரிவு முதலியவற்றிற்குக் கடலும் உவமைகளாயின. மால்: கருமை, பெருமைகளை உணர்த்தியது. காலம்: கரியநஞ்சு. 2 |