கலிவிருத்தம்

4596.கருவி மா மழைகள் கைகள் தாவி மீது
உருவி, மேனி சென்று உலவி ஒற்றலால்,
பொரு இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால்,
அருவி பாய்தரும் குன்றமே அனான்;

     (அந்த அசுரன்)கருவி மாமழை - (உலகம் நடைபெறுவதற்கு)
முதற்காரணமான பெரிய மேகங்கள்; கைகள் தாவி - அவன் கைகளில் தாவி;
மீது உருவி மேனி சென்று -
ஊடுருவி அவனது உடலில் சென்று; உலவி -
உலாவி; ஒற்றலால் - படிதலாலும்; பொருவு இல்மாரி - ஒப்பில்லாத மழைநீர்;
மேல் ஒழுகு பொற்பினால் -
அவன் மேல் பெருகி வழிந்த அழகாலும்;
அருவி பாய்தரும் -
நீரருவிகள் பாய்ந்தோடி வரும்; குன்றமே அனான் -
ஒரு மலையையொத்தவனானான்.

     கருவி: காரணம்.  மின்னல் இடி முதலியவற்றோடு கூடி வருவதால் கருவி
மழை என்பதைத் தொகுதியான பெரிய மேகம் எனவும் கொள்ளலாம்.  பழைய
நூல்களில் இவ்வழக்கு உண்டு.  (குறுந். 42, மணி. 17-92) அந்த அசுரனின்
தோள்கள்மேலும் உடம்பின் மேலும் மேகங்கள் தவழ்ந்து பெருகுமாறு
மழைநீரைப் பொழிவதால், மேகங்கள் தன்மேல் உலாவப் பெற்று நீரருவி
பாயும் மலை அவனுக்கேற்ற உவமையாகும். சிலேடையணி.            3