அசுரனைப் பற்றி அனுமன் வினாவும் அங்கதன் விடையும் 4602. | 'யார் கொலாம் இவன்? இழைத்தது என்?' எனா, தாரை சேயினைத் தனி வினாவினான். மாருதேயன்; மற்று அவனும், 'வாய்மை சால் ஆரியா! தெரிந்து அறிகிலேன்' என்றான். |
மாருதேயன் - வாயுவின் மகனான அனுமன்; தாரை சேயினை - தாரையின் மகனான அங்கதனை நோக்கி; இவன் யார் கொல் ஆம் - (இறந்து கீழே விழுந்து கிடக்கும்) இவன் யார்? இழைத்தது என் - இவன் செய்தது என்ன?எனா - என்று; தனி வினாவினான் - குறிப்பிட்டுக் கேட்டான்; மற்று - பின்பு; அவனும் - அந்த அங்கதனும் (அனுமனை நோக்கி); வாய்மை சால் ஆரியா - வாய்மை நிறைந்த பெரியவனே!தெரிந்து அறிகிலேன் - நான் இவனைப் பற்றி ஒன்றும் அறியேன்; என்றான் - என்று விடை கூறினான். கொல் - ஐயப்பொருளையும், சால் - மிகுதிப் பொருளையும் உணர்த்திய உரிச் சொற்கள். இவன் என்பது மத்திமதீபம் இடைநிலை விளக்காய் நின்று 'யார் கொலாம்' என்பதையும், 'இழைத்ததென்' என்பதையும் தழுவியது. மாருதேயன்: மருத்தின் புதல்வன் - தத்திதாந்தப் பெயர். வாய்மை, கல்வி முதலியவற்றாலும் ஒழுக்கத்தாலும் சிறந்தவனாதலால் அனுமனை அங்கதன் 'ஆரியா' என்று விளித்தான். 9 |