அசுரனைப் பற்றி அனுமன் வினாவும் அங்கதன் விடையும்

4602.'யார் கொலாம் இவன்?
      இழைத்தது என்?' எனா,
தாரை சேயினைத்
      தனி வினாவினான்.
மாருதேயன்; மற்று அவனும்,
      'வாய்மை சால்
ஆரியா! தெரிந்து
      அறிகிலேன்' என்றான்.

     மாருதேயன் - வாயுவின் மகனான அனுமன்; தாரை சேயினை -
தாரையின் மகனான அங்கதனை நோக்கி; இவன் யார் கொல் ஆம் -
(இறந்து கீழே விழுந்து கிடக்கும்) இவன் யார்? இழைத்தது என் - இவன்
செய்தது என்ன?எனா - என்று; தனி வினாவினான் - குறிப்பிட்டுக்
கேட்டான்; மற்று - பின்பு; அவனும் - அந்த அங்கதனும் (அனுமனை
நோக்கி); வாய்மை சால் ஆரியா - வாய்மை நிறைந்த பெரியவனே!தெரிந்து
அறிகிலேன் -
நான் இவனைப் பற்றி ஒன்றும் அறியேன்; என்றான் - என்று
விடை கூறினான்.

     கொல் - ஐயப்பொருளையும், சால் - மிகுதிப் பொருளையும் உணர்த்திய
உரிச் சொற்கள்.  இவன் என்பது மத்திமதீபம் இடைநிலை விளக்காய் நின்று
'யார் கொலாம்' என்பதையும், 'இழைத்ததென்' என்பதையும் தழுவியது.
மாருதேயன்: மருத்தின் புதல்வன் - தத்திதாந்தப் பெயர். வாய்மை, கல்வி
முதலியவற்றாலும் ஒழுக்கத்தாலும் சிறந்தவனாதலால் அனுமனை அங்கதன்
'ஆரியா' என்று விளித்தான்.                                      9