சாம்பவான் துமிரன் வரலாறு கூறுதல் 4603. | 'யான் இவன்தனைத் தெரிய எண்ணினேன்; தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே - ரான், இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர் தானவன்' என, சாம்பன் சாற்றினான். |
(அது கேட்டுச்) சாம்பன் - (அனுமனை நோக்கி) கரடிகளுக்குத் தலைவனான சாம்பவான்; யான் இவன்தனை - நான் இந்த அசுரனைக் குறித்து; தெரிய எண்ணினேன் - இன்னானென்று தெரிந்து கொள்ளும்படி நினைத்துப் பார்த்தேன்; தூ நிவந்த வேல் - பகைவரது புலால் நிறைந்த வேற்படையைத் தாங்கியுள்ள; துமிரன் என்னும் பேரான் - துமிரன் என்னும் பெயரையுடையவன்; இவ் ஆழ்புனல் பொய்கை ஆளும் - ஆழ்ந்த நீரையுடைய இந்தப் பொய்கையை ஆட்சி செய்கின்ற; ஓர் தானவன் - ஓர் அசுரனாவான்; எனச் சாற்றினான் - என்று கூறினான். திருமாலின் திரிவிக்கிரமாவதார காலத்தில் அவன் திருவடிகள் உலகில் பரவியதைக் காணுமாறு சாம்பவான் பலமுறை பூமியை வலம் வந்தவனாதலால் உலகத்திலுள்ள பல செய்திகளைத் தெரிந்திருத்தல் பற்றி அவன் இந்த அசுரனைக் குறித்து இன்னானென்று வினவியறிந்திருந்தான் என்பது. தூ நிவந்த வேல்: துமிரனது வேலின் வெற்றிச் சிறப்பைக் கூறுவது. தூ - புலால். அங்கதன் இத் துமிரன் என்னும் அசுரனைக் கொன்ற செய்தி வானரர் பிலம் புகுவதற்குமுன் நிகழ்ந்த்தாகக் கூறும்வான்மீகம். 10 |