வானரர் பெண்ணையாற்றை அடைதல் 4604. | 'வேறும் எய்துவார் உளர் கொலாம்' எனா, தேறி, இன் துயில் செலவு தீர்ந்துளார், வீறு செஞ் சுடர்க் கடவுள் வேலைவாய் நாற, நாள்மலர்ப் பெண்ணை நாடுவார். |
வேறும் - இவ் வசுரனையல்லாமல் வேறு சிலரும்; எய்துவார் உளர்கொல் ஆம் எனா - இங்கு போருக்கு வரக் கூடியவர் இருக்கி றார்களோ என்று கருதி; இன்துயில் செலவு தீர்ந்துள்ளார் - (தமது) இனிய தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து (அவ்வாறு வருபவர்களைச் சிறிதுநேரம் எதிர்நோக்கின் பின்பு); தேறி - இனி எவரும் வாரார் எனத் தெளிந்து; வீறு செஞ்சுடர்க் கடவுள் - பெருமை மிக்க சிவந்த கதிர்களையுடைய சூரியன்; வேலை வாய் நாற - கிழக்குக் கடலிடத்துத் தோன்ற; நாள் மலர்ப் பெண்ணை - புதிதாய் மலர்ந்த மலர்கள் நிறைந்த பெண்ணையாற்றை; நாடுவார் - நோக்கிச் சென்றனர். வானரவீரர் 'இன்னும் இவன்போன்ற அசுரர் வேறு யாரேனும் போருக்கு வரக் கூடும்' என்று கருதித் தூங்காமல் விழித்திருந்து எதிர்பார்த்த பின்பு, சூரியன் உதிக்கும் வேளையில் சீதையைத் தேடுமாறு அங்கிருந்து புறப்பட்டுப் பெண்ணையாற்றை அடைந்தனர். வேறும் - எச்சவும்மை. வீறு : பிறர்க்கு இல்லாத தனிப் பொலிவு. நாறுதல் :தோன்றுதல். 11 |