வானரர் பெண்ணையாற்றை அடைதல்

4604.'வேறும் எய்துவார் உளர் கொலாம்' எனா,
தேறி, இன் துயில் செலவு தீர்ந்துளார்,
வீறு செஞ் சுடர்க் கடவுள் வேலைவாய்
நாற, நாள்மலர்ப் பெண்ணை நாடுவார்.

     வேறும் - இவ் வசுரனையல்லாமல் வேறு சிலரும்; எய்துவார்
உளர்கொல் ஆம் எனா -
இங்கு போருக்கு வரக் கூடியவர் இருக்கி
றார்களோ என்று கருதி; இன்துயில் செலவு தீர்ந்துள்ளார் - (தமது) இனிய
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து (அவ்வாறு வருபவர்களைச் சிறிதுநேரம்
எதிர்நோக்கின் பின்பு); தேறி - இனி எவரும் வாரார் எனத் தெளிந்து; வீறு
செஞ்சுடர்க் கடவுள் -
பெருமை மிக்க சிவந்த கதிர்களையுடைய சூரியன்;
வேலை வாய் நாற -
கிழக்குக் கடலிடத்துத் தோன்ற; நாள் மலர்ப்
பெண்ணை -
புதிதாய் மலர்ந்த மலர்கள் நிறைந்த பெண்ணையாற்றை;
நாடுவார் -
நோக்கிச் சென்றனர்.

     வானரவீரர் 'இன்னும் இவன்போன்ற அசுரர் வேறு யாரேனும் போருக்கு
வரக் கூடும்' என்று கருதித் தூங்காமல் விழித்திருந்து எதிர்பார்த்த பின்பு,
சூரியன் உதிக்கும் வேளையில் சீதையைத் தேடுமாறு அங்கிருந்து புறப்பட்டுப்
பெண்ணையாற்றை அடைந்தனர்.  வேறும்  - எச்சவும்மை. வீறு : பிறர்க்கு
இல்லாத தனிப் பொலிவு. நாறுதல் :தோன்றுதல்.                    11