4612.உண்டு, அகத்துளார், உறையும் ஐம் பொறிக்
கண்டகர்க்கு அருங் காலன் ஆயினார்,
தண்டகத்தையும் தடவி ஏகினார்;
முண்டகத்துறை கடிது முற்றினார்.

     உண்டு அகத்துள் ஆர் உறையும் - புலன்களைத் துய்த்துக் கொண்டு
உடம்பினுள் பொருந்தி வசிக்கின்ற; ஐம் பொறிக் கண்ட கர்க்கு - ஐந்து
இந்திரிய உணர்ச்சிகளாகிய (முள் போன்ற) கொடியவர்களுக்கு; அருங் காலன்
ஆயினார் -
கொடிய யமன் போன்றவர்களாகிய முனிவர்கள் வசிக்கின்ற;
தண்டகத்தையும் தடவி -
அந்தத் தண்டக வனத்தையும் தேடிப் பார்த்து;
ஏகினார் -
(அங்கும் சீதையைக் காணாமல்) அந்த இடத்தை விட்டு நீங்கிய
அவ் வானர வீரர்கள்; முண்டகத் துறை - முண்டகத் துறை யென்னும்
இடத்தை; கடிது முற்றினார் - விரைவாகச் சென்று சேர்ந்தார்கள்.

     ஐம்பொறிகள், ஆன்மாவை நற்கதியில் சேரவொட்டாது துன்புறுத்து
வதால் அவற்றைக் 'கண்டகர்' என்றார்.  கண்டகர்: முள்போன்ற கொடியோர்.
ஐம்பொறிக் கண்டகர்க்கு அருங்காலனாயினார்: ஐம்பொறிகளுக்குக் கூற்றுவன்
ஆனவர்.  அஃதாவது, மனத்தை நல்வழியிற் செல்லவொட்டாது தடுத்து
ஐம்புலன்களிற் செல்லுமாறு இழுக்கின்ற ஐம்பொறிகளை அவ்வாறு
செய்யவொட்டாது தடுத்துத் தம் வசமாக்கி மனத்தைச் சீவான்மா பரமான்மா
தியானங்களில் செலுத்தும் வல்லமையுடையவர்; ஜிதேந்திரியர் எனப்படுவர்.
முண்டகத் துறை: தாமரை முதலிய பூக்கள் நிறைந்து விளங்கும் நீர்த்
துறையையுடைய ஒருசூழல்.                                       19