4614. | குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால் - விஞ்சை மன்னர்பால் விரக மங்கைமார், நஞ்சு, வீணையின் நடத்து பாடலான், அஞ்சுவார், கணீர் அருவி ஆறுஅரோ! |
விஞ்சை மன்னர்பால் - வித்தியாதர மன்னரிடத்து; விரக மங்கை மார்- தாம் கொண்ட பிரிவுத் துயரால் வேதனைப்படுகின்ற வித்தியாதர மகளிர்; வீணையின் நடத்து - வீணைகளைக் கொண்டு பிறர் பாடும்; பாடலான் - இசைப் பாட்டினால்; நஞ்சு அஞ்சுவார் - மனம் நைந்து நடுங்குவார்கள்; கண்நீர் அருவி ஆறு - (அவ்வாறு நடுங்குவதால் அவர்கள் சொரியும்) கண்ணீர்அருவிபோல் பெருகும் ஆற்றில்; குஞ்சரம் குடைந்து - யானைகள் அமிழ்ந்துமூழ்கி; ஒழுகும் கொட்பு அது - நீராடும் தன்மையுடையது (அந்த முண்டகத்துறை). ஆல், அரோ: ஈற்றசை. தத்தம் கணவரைப் பிரிந்த வித்தியாதர மகளிர், தம்மைப் போலப் பிரிவில்லாத மகளிர் மனக் கிளர்ச்சியோடு வீணைகளைக் கொண்டு பாடும் பாடலைக் கேட்டு வருந்தி விரக வேதனையுற்று மனம் நடுங்கிக் கண்ணீர் சிந்துவார்கள்; அக் கண்ணீர்ப் பெருக்கு யானைகளும் அமிழ்ந்து மூழ்கும் பெரிய நீர்ப் பெருக்காகும் என்பது. தொடர்புயர்வு நவிற்சியணி. விஞ்சை மன்னர்; காமநூல்களைக் கற்றுத் தேர்ந்த வித்தியாதர ஆடவர். கணீர் - இடைக்குறை (கண்ணீர்) 21 |