4614.குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால் -
விஞ்சை மன்னர்பால் விரக மங்கைமார்,
நஞ்சு, வீணையின் நடத்து பாடலான்,
அஞ்சுவார், கணீர் அருவி ஆறுஅரோ!

     விஞ்சை மன்னர்பால் - வித்தியாதர மன்னரிடத்து; விரக மங்கை
மார்-
தாம் கொண்ட பிரிவுத் துயரால் வேதனைப்படுகின்ற வித்தியாதர
மகளிர்; வீணையின் நடத்து - வீணைகளைக் கொண்டு பிறர் பாடும்;
பாடலான் - இசைப் பாட்டினால்; நஞ்சு அஞ்சுவார் - மனம் நைந்து
நடுங்குவார்கள்; கண்நீர் அருவி ஆறு - (அவ்வாறு நடுங்குவதால்
அவர்கள் சொரியும்) கண்ணீர்அருவிபோல் பெருகும் ஆற்றில்; குஞ்சரம்
குடைந்து -
யானைகள் அமிழ்ந்துமூழ்கி; ஒழுகும் கொட்பு அது - நீராடும்
தன்மையுடையது (அந்த முண்டகத்துறை).

     ஆல், அரோ: ஈற்றசை.  தத்தம் கணவரைப் பிரிந்த வித்தியாதர மகளிர்,
தம்மைப் போலப் பிரிவில்லாத மகளிர் மனக் கிளர்ச்சியோடு வீணைகளைக்
கொண்டு பாடும் பாடலைக் கேட்டு வருந்தி விரக வேதனையுற்று மனம்
நடுங்கிக் கண்ணீர் சிந்துவார்கள்; அக் கண்ணீர்ப் பெருக்கு யானைகளும்
அமிழ்ந்து மூழ்கும் பெரிய நீர்ப் பெருக்காகும் என்பது.  தொடர்புயர்வு
நவிற்சியணி.  விஞ்சை மன்னர்; காமநூல்களைக் கற்றுத் தேர்ந்த வித்தியாதர
ஆடவர். கணீர் - இடைக்குறை (கண்ணீர்)                          21