4615. கமுக வார் நெடுங் கனக ஊசலில்,
குமுத வாயினார், குயிலை ஏசுவார்;
சமுக வாளியும், தனுவும் வாள் முகத்து
அமுத பாடலார், மருவி ஆடுவார்.

     குமுத வாயினார் - செவ்வாம்பல் மலர் போன்ற வாயையுடை
யவர்களும்; குயிலை ஏசுவார் - (தமது குரலால்) குயிலைப் பழிப் பவர்களும்;
சமுக வாளியும் -
கூட்டமான அம்புகள் போன்ற கண் களையும்; தனுவும் -
வில்லைப் போன்ற புருவங்களையும் கொண்ட; வாள் முகத்து - ஒளி
பொருந்திய முகங்களையுடைய; அமுத பாடலார் - அமிழ்தம் போன்ற இனிய
பாடல்களைப் பாடுகின்றவர்களான மகளிர்; கமுக வார் நெடுங் கனக
ஊசலில் -
பாக்கு மரங்களில் கட்டப்பட்ட நீண்ட பொன்னூஞ்சல்களில்;
மருவி ஆடுவார் -
பொருந்தி ஆடி மகிழ்வார்கள்.

     அங்கே பாக்குமரங்களில் கட்டப்பட்டுள்ள பொன்னூஞ்சல்களில் மகளிர்
மனமகிழ்ந்து ஆடுவாரென அந்த இடத்தின் அமைதியான சூழல் வருணிக்கப்
பெற்றது. தனு: மகளிர் புருவத்திற்கு வடிவம் தொழிலும் பற்றிய உவமை.
வாளி, தனு: உவமவாகு பெயர்கள்.  உருவக உயர்வுநவிற்சியணி.       22