4622. | ஆசு இல் பேர் உலகில் காண்போர் அளவைநூல் எனலும் ஆகி, காசொடு கனகம் தூவி, கவின் உறக் கிடந்த கான் யாறு, - ஏசு இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து, எருவை வேந்தன் வீசிய வடக மீக் கோள் ஈது என - விளங்கிற்று அன்றே. |
காசொடு கனகம் தூவி - இரத்தினங்களொடு பொன்னையும் தன்அலைகளால் கொழித்துக் கொண்டு; கவின் உறக் கிடந்த கான் யாறு - அழகாக ஓடிப் பல காடுகளிடையே செல்லும் அந்த கோதாவரி நதி; ஆசு இல் பேருலகில் - குற்றமற்ற பெரிய இந்த நிலவுலகத்தில்; காண் போர் - அதனைக் காண்பவர்க்கு; அளவை நூல் எனலும் ஆகி - தருக்க சாத்திரம் போல விளங்கி; எருவை வேந்தன் - கழுகுகளுக்கு அரசனான சடாயு; ஏசு இல் போர் அரக்கன் - பழிப்புக்கிடமில்லாத போரில் சிறந்த அரக்கனாகிய இராவணனது; மார்பின் இடை - மார்பிலிருந்து; பறித்து வீசிய - பிடுங்கி அலகால் வீசியெறிந்து; மீக் கோள் வடகம் ஈது என - மேலே அணியப் பெற்ற இரத்தினமாலையோ இது என்று சொல்லத்தக்காய்; விளங்கிற்று - விளங்கியது. அன்று, ஏ: ஈற்றசைகள் கோதாவரி நதி பூமியையளக்கக்கூடிய அளவை நூல் போலவும், கழுகரசனான சடாயு, சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனோடு போர் செய்கையில் அவனது மார்பிலிருந்து கழற்றியெறிந்த முத்தாரம் போலவும் விளங்கியது என்பது, வடகம் - வடம் என்பதன் விரித்தல் விகாரம். கோதாவரிக்குத் தருக்க நூல் உவமம்: 29 |