4622.ஆசு இல் பேர் உலகில்
      காண்போர் அளவைநூல் எனலும் ஆகி,
காசொடு கனகம் தூவி, கவின் உறக்
      கிடந்த கான் யாறு, -
ஏசு இல் போர் அரக்கன்
      மார்பினிடை பறித்து, எருவை வேந்தன்
வீசிய வடக மீக் கோள் ஈது
      என - விளங்கிற்று அன்றே.

     காசொடு கனகம் தூவி - இரத்தினங்களொடு பொன்னையும்
தன்அலைகளால் கொழித்துக் கொண்டு; கவின் உறக் கிடந்த கான் யாறு -
அழகாக ஓடிப் பல காடுகளிடையே செல்லும் அந்த கோதாவரி நதி; ஆசு
இல் பேருலகில் -
குற்றமற்ற பெரிய இந்த நிலவுலகத்தில்; காண் போர் -
அதனைக் காண்பவர்க்கு; அளவை நூல் எனலும் ஆகி - தருக்க சாத்திரம்
போல விளங்கி; எருவை வேந்தன் - கழுகுகளுக்கு அரசனான சடாயு; ஏசு
இல் போர் அரக்கன் -
பழிப்புக்கிடமில்லாத போரில் சிறந்த அரக்கனாகிய
இராவணனது; மார்பின் இடை - மார்பிலிருந்து; பறித்து வீசிய - பிடுங்கி
அலகால் வீசியெறிந்து; மீக் கோள் வடகம் ஈது என - மேலே அணியப்
பெற்ற இரத்தினமாலையோ இது என்று சொல்லத்தக்காய்; விளங்கிற்று -
விளங்கியது.

     அன்று, ஏ: ஈற்றசைகள் கோதாவரி நதி பூமியையளக்கக்கூடிய அளவை
நூல் போலவும், கழுகரசனான சடாயு, சீதையைக் கவர்ந்து சென்ற
இராவணனோடு போர் செய்கையில் அவனது மார்பிலிருந்து கழற்றியெறிந்த
முத்தாரம் போலவும் விளங்கியது என்பது, வடகம் - வடம் என்பதன் விரித்தல்
விகாரம். கோதாவரிக்குத் தருக்க நூல் உவமம்:                       29