சுவணகத் துறை கடந்து குலிந்த நாட்டைக் கடத்தல்

4623. அந் நதி முழுதும் நாடி,
      ஆய் வளை மயிலை, யாண்டும்
சந்நிதி உற்றிலாதார், நெடிது
      பின் தவிரச் சென்றார்;
'இன்ன தீதுஇலாத, தீது' என்று
      யாவையும் எண்ணும் கோளார்,
சொன்ன தீவினைகள் தீர்க்கும்
      சுவணகத் துறையில் புக்கார்.

     இன்ன தீது இலாத - இன்னது நல்லது; (இன்ன) தீது என்று - இன்னது
கெட்டது என்று; யாவையும் எண்ணும் கோளார் - எல்லாவற்றையும்
ஆராய்ந்து அறியும் தன்மையுடைய வானரவீரர்; அந் நதி
முழுதும் நாடி -
அந்தக் கோதாவரி நதிப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்து;
ஆய்வளை மயிலை -
சிறந்த வளையல்களையணிந்த மயில் போன்ற
சீதையை; யாண்டும் சந்நிதி உற்றிலாதார் - எதிரில் காணப் பெறாத
அவர்கள்; நெடிது பின் தவிரச் சென்றார் - நீண்ட வழி பின்னால் கழியுமாறு
முன்னேறிச் சென்றவர்களாய்; சொன்ன தீவினைகள் - நூல்களில் கூறிய
பாவங்களையெல்லாம்; தீர்க்கும் சுவணகத் துறையில் - (தன்னில்
படிவோர்க்குப்) பாவத்தைப் போக்குகின்ற சுவணக (சோணை) நதியிடத்தில்;
புக்கார் -
சென்று சேர்ந்தார்கள்.

     ஆய்வளை மயில்: அடையடுத்த உவமையாகுபெயர். சந்நிதி:
வடசொல்லின் திரிபு - எதிரேகாணல், சுவணகம்: ஒரு நதி; சோணம், சோணை
எனவும் வழங்கப் பெறும்.                                        30