4624. | சுரும்பொடு தேனும், வண்டும், அன்னமும், துவன்றி; புள்ளும், கரும்பொடு செந் நெல் காடும், கமல வாவிகளும், மல்கி; பெரும் புனல் மருதம் சூழ்ந்த கிடக்கை பின் கிடைக்கச் சென்றார்; குரும்பை நீர் முரஞ்சும் சோலைக் குலிந்தமும், புறத்துக் கொண்டார். |
சுரும்பொடு தேனும் வண்டும் - பொன்வண்டு, தேன்வண்டு, கருவண்டு என்னும் பலவகையான வண்டுகளும்; அன்னமும் - அன்னப் பறவைகளும்; துவன்றி - நெருங்கி; புள்ளும் - நாரை முதலான ஏனைய பறவைகளும்; கரும்பொடு - கரும்புகளும்; செந்நெல் காடும் - செந்நெற் பயிர்களும் அடர்ந்த நன்செய் இடங்களும்; கமல வாவிகளும் - தாமரைத் தடாகங்களும்; மல்கி - நிறைந்து; பெரும்புனல் மருதம் சூழ்ந்த - மிக்க நீர்வளங் கொண்ட மருதநிலம் சூழ்ந்துள்ள; கிடக்கை பின் கிடக்க - இடங்கள் தம் பின்னால் கிடக்கும்படி; சென்றார் - அப்பால் கடந்து சென்றனர் அந்த வானரவீரர்கள்; நீர்க் குரும்பை - இளநீர்க் காய்கள்; முரஞ்சும் சோலைக் குலிந்தமும் - நிரம்பிய தென்னஞ்சோலைகளையுடைய குலிந்த நாட்டையும்; புறத்துக் கொண்டார் - (தமது) பின்புறத்ததாகும்படி முன்னேறிச் சென்றார்கள். மருதநில: அன்னம் முதலிய பறவைகளையும், செந்நெல் முதலிய உணவு வகைகளையும் தாமரை மலர்களையும், பொய்கைகளையும் தன்னிடத்தே கொண்டது; வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் மருதம் ஆகும். சுரும்பு, தேன், வண்டு: வண்டுகளின் வகைகளைக் குறிக்கும் சொற்கள்; சுரும்பு; எல்லா மணத்திலும் செல்வது எனவும் தேன், வண்டு: நன்மணத்தே செல்வன எனவும் கூறுவர். இச் செய்யுளில் நிலம், நீர், பூ, பறவை, மரம் முதலியவற்றால் குவிந்த நாட்டின் மருத வளம் கூறப் பெற்றது. குரும்பை: தெங்கு, பனை ஆகிய மரங்களின் இளங்காய் குலிந்தம்: இக் குலிந்ந நாடு கேரள நாட்டின் வடக்கே மேற்கடற்கரையையடுத்துள்ளதாகவும் பழைய ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்றெனவும்கூறுவர். 31 |