அருந்ததி மலை, மரகத மலைகளைக் கடந்து வேங்கட மலை சேர்தல்

4625.கொங்கணம் ஏழும் நீங்கி, குட
      கடல் தரளக் குப்பைச்
சங்கு அணி பானல் நெய்தல் -
      தண் புனல் தவிர ஏகி,
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய
      நீள் கோட்டுத்  தேவர்
அங்கைகள் கூப்ப, நின்ற
      அருந்ததிக்கு அருகர் ஆனார்.

     கொங்கணம் ஏழும் நீங்கி - (அந்த வானர வீரர்) கொங்கண நாட்டின்
ஏழு பிரிவுகளையும் கடந்து; குடகடல் - மேற்குக் கடலில் உண்டான; தரளக்
குப்பை -
முத்துக் குவியல்கள்; சங்கு - சங்குகள்; அணிபானல் - அழகான
கருங்குவளை மலர்கள்; நெய்தல் - நெய்தற் பூக்கள்; தண்புனல் தவிர ஏகி -
ஆகியவை நிறைந்த குளிர்ந்த நீர்ப் பகுதிகளையுடைய நெய்தல் நிலத்தை
நீங்கிச் சென்று; திங்களின் கொழுந்து சுற்றும் - பிறைச் சந்திரன் சுற்றிச்
செல்லக்கூடிய; சிமய நீள் கோடு - சிகரங்களையுடைய உயரமான
கொடுமுடிகளைக் கொண்டதும்; தேவர் அங்கைகள் கூப்ப நின்ற -
தேவர்கள் தம் அழகிய கைகளைக் குவித்து வணங்கும்படி நிற்பதுமான;
அருந்ததிக்கு -
அருந்ததி என்னும் மலைக்கு; அருகர் ஆனார் - அருகில்
போய்ச் சேர்ந்தார்கள்.

     வானரவீரர்கள் ஏழு பிரிவுகளையுடைய கொங்கண தேசத்தையும்,
மேற்குத் திசையிலுள்ள நெய்தல் நிலங்களையும் தாண்டி மிக உயர்ந்துள்ள
அருந்ததிமலையைச் சேர்ந்தார்கள் என்பது. கொங்கணம்: மகாராட்டிர
மாநிலத்தைச் சேர்ந்த வடகன்னடம் என்னும் மாவட்டத்தது. தேவர்
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததி: உயர்வு நவிற்சியணி.               32