4629.வலம் கொள் நேமி
      மழை நிற வானவன்
அலங்கு தாள் இணை
      தாங்கிய அம் மலை
விலங்கும் வீடு உறுகின்றன;
      மெய்ந் நெறி
புலன் கொள்வார்கட்கு
      அனையது பொய்க்குமோ?

     வலம் கொள் நேமி - வெற்றி கொள்ளும் சுதரிசனம் என்ற சக்க
ராயுதத்தைக் கையில் கொண்ட; மழை நிற வானவன் - கார் மேகம்
போன்ற கருநிறத்தையுடைய கடவுளான திருவேங்கடவனது; அலங்கு தாள்
இணை -
விளங்குகின்ற இரண்டு திருவடிகளையும்; தாங்கிய - தாங்கி நின்ற;
அம்மலை -
அத் திருவேங்கடமலையில் வாழ்கின்ற; விலங்கும் -
மிருகங்களும்; வீடு உறுகின்றன - மோட்சத்தையடைகின் றன
(அவ்வாறானால்); மெய்ந் நெறி புலன் கொள்வார்கட்கு - உண்மை
நெறியான தவ நியமங்களில் தன் மனத்தைச் செலுத்தும் யோகியர்
முதலோர்க்கு; அனையது - அந்த மோட்சமானது; பொய்க்குமோ-
கிடைக்காமல் தவறிப் போகுமோ? (தவறிப் போகாது).

     மிகப் பெருஞ்சிறப்பு வாய்ந்த அத் திருவேங்கட மலையில் வாழும்
மிருகங்களும் வீட்டுலகத்தையடையுமென்றால் தவவொழுக்கங்களில் நடக்கின்ற
யோகியர் முதலோர்க்கு அந்த வீட்டுலகம் கிடைப்பது தவறுமோ என்பது.
விலங்கும்: உம்மை இழிவுசிறப்பு. திருவேங்கடமலை வீட்டுப் பதவியைத்
தவறாது அளிக்கவல்லதாகையால்தான் 'எம்பெருமான் பொன்மலையில்
ஏதேனும் ஆவேனே' (பெருமாள் திருமொழி 4 : 10) என்றார் குலசேகராழ்வார்.
                                                             36