4632.குன்று சூழ்ந்த கடத்தொடும், கோவலர்
முன்றில் சூழ்ந்த படப்பையும், மொய் புனல்
சென்று சூழ்ந்த கிடக்கையும், தெண் திரை
மன்று சூழ்ந்த பரப்பும் - மருங்கு எலாம்.

     மருங்கு எலாம் - (அத் தொண்டை நாட்டின்) இடங்களெல்லாம்; குன்று
சூழ்ந்த கடத்தொடும் -
மலைகள் சூழ்ந்த சாரல்களும் (குறிஞ்சியும்);
கோவலர் மூன்றில் -
இடையர்களின் முற்றங்களை; சூழ்ந்த படப்பையும் -
சூழ்ந்துள்ள தோட்டங்களும் (முல்லை நிலமும்); மொய் புனல் சென்று
சூழ்ந்த -
மிக்க நீர்சுற்றிலும் பாய்ந்து நிறைந்துள்ள; கிடக்கையும் -
இடங்களான மருத நிலங்களும்; தெண் திரை - தெளிந்த அலைகளையுடைய;
மன்று சூழ்ந்த பரப்பும் -
மணல் வெளியான இடங்கள் சூழ்ந்த நெய்தல்
நிலமும் (உள்ளன).

     வினை முற்று (உள்ளன) வருவித்து முடிக்கப்பட்டது.  இதனால்
அத்தொண்டை நாடு நால்வகை நிலங்களும் கொண்டிருத்தலைக் கூறினார்.
கோவலர்: பசுக்களை மேய்த்துக் காப்பவர்.  படப்பை : வரகு முதலியன
விளைதற்குரிய தோட்டம்.  மன்று: வெளியான இடம். முன்றில் : இலக்கணப்
போலி.                                                       39