4634.செருகுறும் கணின் தேம் குவளைக் குலம்
அருகு உறங்கும் வயல் மருங்கு, ஆய்ச்சியர்
இரு குறங்கு பிறங்கிய வாழையில்
குருகு உறங்கும்
; குயிலும் துயிலுமால்.

     செருகு உறும் கணின் - கூந்தல் வரை நீண்டுள்ள (மகளிரின்) கண்
போன்ற;  தேம் குவளைக் குலம் - தேனையுடைய குவளைப் பூக்களின்
கூட்டம்; அருகு உறங்கும் - பக்கங்களில் உறங்குவது போலக்
குவிந்திருக்கும்; வயல் மருங்கு - நீர் நிறைந்த வயலிடங்களில்; ஆய்ச்சியர்
-
(அந்த நாட்டு) இடைச்சியரின்; இரு குறங்கு பிறங்கிய வாழையில் -
இரண்டு தொடைகளைப் போல விளங்கிய வாழை மரங்களிலே; குருகு
உறங்கும் -
நாரைகள் தூங்கும்; குயிலும் துயிலும் - (அங்கே) குயில்களும்
தூங்கிக் கொண்டிருக்கும்.

     ஆல்: ஈற்றசை. பகற்பொழுதில் குவளைமலர்கள் குவிந்து
குறுகியிருக்குமாதலால் அவை மகளிரின் குறுகிய கடை நோக்கிற்கு
உவமையாயின.  வாழை: மகளிர் தொடைக்கு உவமை; எதிர் நிலையணி: இந்த
அணியினால் குவளைமலர், வாழை என்ற இவற்றை விட மகளிரின் கண்ணும்,
தொடையும் மிகுந்த சிறப்புடையன என்பது பெறப்படும்.  முடித்துச்
செருகப்படுவதால் கூந்தல் 'செருகு' எனப்பட்டது; முதனிலைத் தொழிலாகு
பெயர்.                                                       41