4634. | செருகுறும் கணின் தேம் குவளைக் குலம் அருகு உறங்கும் வயல் மருங்கு, ஆய்ச்சியர் இரு குறங்கு பிறங்கிய வாழையில் குருகு உறங்கும்; குயிலும் துயிலுமால். |
செருகு உறும் கணின் - கூந்தல் வரை நீண்டுள்ள (மகளிரின்) கண் போன்ற; தேம் குவளைக் குலம் - தேனையுடைய குவளைப் பூக்களின் கூட்டம்; அருகு உறங்கும் - பக்கங்களில் உறங்குவது போலக் குவிந்திருக்கும்; வயல் மருங்கு - நீர் நிறைந்த வயலிடங்களில்; ஆய்ச்சியர் - (அந்த நாட்டு) இடைச்சியரின்; இரு குறங்கு பிறங்கிய வாழையில் - இரண்டு தொடைகளைப் போல விளங்கிய வாழை மரங்களிலே; குருகு உறங்கும் - நாரைகள் தூங்கும்; குயிலும் துயிலும் - (அங்கே) குயில்களும் தூங்கிக் கொண்டிருக்கும். ஆல்: ஈற்றசை. பகற்பொழுதில் குவளைமலர்கள் குவிந்து குறுகியிருக்குமாதலால் அவை மகளிரின் குறுகிய கடை நோக்கிற்கு உவமையாயின. வாழை: மகளிர் தொடைக்கு உவமை; எதிர் நிலையணி: இந்த அணியினால் குவளைமலர், வாழை என்ற இவற்றை விட மகளிரின் கண்ணும், தொடையும் மிகுந்த சிறப்புடையன என்பது பெறப்படும். முடித்துச் செருகப்படுவதால் கூந்தல் 'செருகு' எனப்பட்டது; முதனிலைத் தொழிலாகு பெயர். 41 |