4641.குழுவும் மீன் வளர் குட்டம்எனக் கொளா,
எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ் முறை
முழுகி, நீர்க் கருங் காக்கை முளைக்குமே.

     கரு நீர்க் காக்கை - கரிய நிறமுள்ள நீர்க் காக்கைகள்; குழுவும் மீன்
-
கூட்டமாகத் திரளும் தன்மையுள்ள மீன்கள்; வளர் - வளர்வதற்கு இடமான;
குட்டம் எனக் கொளா -
சிறு குட்டையென்று நினைத்து; எழுவு பாடல் -
(சுருதி கூட்டுவதற்கு) எழுப்புகின்ற பாடல்போல; இமிழ் கரும்பு எந்திரத்து -
ஒலிக்கின்ற கரும்பாலையிலிருந்து; ஒழுகு சாறு - பெருகுகின்ற கரும்புச்சாறு
(கரும்புப் பால்) நிறைந்த; அகல் கூனையின் - வாய் அகன்ற மிடாவில்;
ஊழ்முறை முழுகி -
ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கி; முளைக்கும் - மேலே
கிளம்பும்.

     ஏ: ஈற்றசை. ஆலையாடிக் கரும்புச் சாறு நிரம்பிய மிடாவை நீர்க்
காக்கைகள் மீன்கள் நிரம்பிய குளங்களென்று மயங்கி அவற்றில் தம்
உணவாகிய மீன்களைக் கொத்தித் தின்பதற்காக மூழ்கி மூழ்கி இரை பெறாது
வெளிக் கிளம்பும் என்பது. சோழநாட்டின் வளம் புலனாகிறது.  இதுவும்
மயக்கவணி. கூனை: கரும்புச் சாறு காய்ச்சுவதற்குரிய வாயகன்றகலம்.   48