4647. வன் திசைக் களிறு அன்ன மயேந்திரக்
குன்று இசைத்தது வல்லையில் கூடினார் -
தென் திசைக் கடற் சீகர மாருதம்
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார்.

     தென் திசைக் கடல் - (வானர வீரர்கள்) தெற்குத் திசையிலுள்ள
கடலின்; சீகர மாருதம் - நீர்த் திவலைகளோடு கூடிய காற்று; நின்று
இசைக்கும் -
இடைவிடாது வீசுகின்ற; நெடு நெறி - (அந்தப் பாண்டிய
நாட்டின்) பெருவழிகளை; நீங்கினார் - கடந்தவர்களாய்.  இசைத்தது -
(பலராலும்) சிறப்பித்துக் கூறப்படுவதான; வன் திசைக் களிறு அன்ன -
வலிய தென் திசையைத் தாங்கும் யானை போல; மயேந்திரக் குன்று -
மயேந்திர மலையை; வல்லையில் கூடினார் - விரைவில் போய்ச்
சேர்ந்தார்கள்.

     பாண்டிய நாட்டிற்குச் சென்ற வானரவீரர் தென் கடற்கரையிலுள்ள
மயேந்திர மலையைச் சேர்ந்தார்களென்பது.  சீகரம்: நீர்த் திவலை. மயேந்திர
மலைக்குத் தென்திசைக் களிறாகிய வாமனம் உவமை; அதன் பெருமையாலும்,
தோற்றத்தாலும், தென் திசையிலுள்ளதாலும் உவமையாயிற்றுஎனலாம்.     54