வானரர் தென் கடலைக் காணுதல்

கலிவிருத்தம் வேறு

4648. மழைத்த விண்ணகம் என
      முழங்கி. வான் உற
இழைத்த வெண் திரைக்
      கரம் எடுத்து, 'இலங்கையாள்,
உழைத் தடங் கண்ணி' என்று
      உரைத்திட்டு, ஊழின் வந்து
அழைப்பதே கடுக்கும் அவ்
      ஆழி நோக்கினார்.

     மழைத்த - நீருண்ட மேகத்தையுடைய; விண்ணகம் என - வானம்
போல; முழங்கி - முழக்கம் செய்து கொண்டு; வான் உற - வானத்தைப்
பொருந்துமாறு; இழைத்த - வீசியெறிகின்ற; வெண்திரைக் கரம்
எடுத்து -
வெண்மையான அலைகளாகிய கைகளை மேலே எடுத்து; உழைத்
தடங்கண்ணி -
மான்போன்ற அகன்ற கண்களையுடைய சீதை; இலங்கையாள்
-
இலங்கையில் இருக்கிறாள்; என்று உரைத்திட்டு - என்று சொல்லி; ஊழின்
வந்து அழைப்பதே கடுக்கும் -
முறையாக எதிரே வந்து (வானரர்களாகிய
தம்மை) அழைப்பதையே ஒத்துள்ள; அவ்ஆழி - அந்தத் தென்கடலை;
நோக்கினார் -
(அவர்கள்) கண்டார்கள்.

     கடல் ஆரவாரம் செய்வது - சீதை இலங்கையில் இருக்கிறாள் என்று
உரக்கக் கூறுவது போலவும், கடலலைகள் வீசியெறிதல் - வானரர்களுக்குக்
குறிப்புக் காட்டுவது போலவும், கடலலை கரையில் செல்வது - அந்த
வானரர்களை இங்கே வாருங்களென்று எதிர்சென்று கைகளைத் தூக்கி
யழைப்பது போலவும் இருந்ததென்பது.  தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
இலங்கையாள்: பெண்பால் குறிப்புமுற்று.  உழைக் கண்ணி: உவமைத் தொகை
(உழை போன்ற கண்ணி) அலைகளை நீர் நிலைகளின் கைகளாக உவமிப்பது
கவிமரபு.  மான் கண்களை மகளிர் கண்களுக்கு உவமிப்பது அவை கருமையும்
பெருமையும் மருண்ட தன்மையும் கொண்டுள்ளமையால்என்பது.          1