வானரர் தென் கடலைக் காணுதல் கலிவிருத்தம் வேறு 4648. | மழைத்த விண்ணகம் என முழங்கி. வான் உற இழைத்த வெண் திரைக் கரம் எடுத்து, 'இலங்கையாள், உழைத் தடங் கண்ணி' என்று உரைத்திட்டு, ஊழின் வந்து அழைப்பதே கடுக்கும் அவ் ஆழி நோக்கினார். |
மழைத்த - நீருண்ட மேகத்தையுடைய; விண்ணகம் என - வானம் போல; முழங்கி - முழக்கம் செய்து கொண்டு; வான் உற - வானத்தைப் பொருந்துமாறு; இழைத்த - வீசியெறிகின்ற; வெண்திரைக் கரம் எடுத்து - வெண்மையான அலைகளாகிய கைகளை மேலே எடுத்து; உழைத் தடங்கண்ணி - மான்போன்ற அகன்ற கண்களையுடைய சீதை; இலங்கையாள் - இலங்கையில் இருக்கிறாள்; என்று உரைத்திட்டு - என்று சொல்லி; ஊழின் வந்து அழைப்பதே கடுக்கும் - முறையாக எதிரே வந்து (வானரர்களாகிய தம்மை) அழைப்பதையே ஒத்துள்ள; அவ்ஆழி - அந்தத் தென்கடலை; நோக்கினார் - (அவர்கள்) கண்டார்கள். கடல் ஆரவாரம் செய்வது - சீதை இலங்கையில் இருக்கிறாள் என்று உரக்கக் கூறுவது போலவும், கடலலைகள் வீசியெறிதல் - வானரர்களுக்குக் குறிப்புக் காட்டுவது போலவும், கடலலை கரையில் செல்வது - அந்த வானரர்களை இங்கே வாருங்களென்று எதிர்சென்று கைகளைத் தூக்கி யழைப்பது போலவும் இருந்ததென்பது. தன்மைத் தற்குறிப்பேற்றவணி. இலங்கையாள்: பெண்பால் குறிப்புமுற்று. உழைக் கண்ணி: உவமைத் தொகை (உழை போன்ற கண்ணி) அலைகளை நீர் நிலைகளின் கைகளாக உவமிப்பது கவிமரபு. மான் கண்களை மகளிர் கண்களுக்கு உவமிப்பது அவை கருமையும் பெருமையும் மருண்ட தன்மையும் கொண்டுள்ளமையால்என்பது. 1 |