4652. | 'அருந் தவம் புரிதுமோ? அன்னது அன்றுஎனின், மருந்து அரு நெடுங் கடு உண்டு மாய்துமோ? திருந்தியது யாது? அது செய்து தீர்தும்' என்று இருந்தனர் - தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார். |
(கிட்கிந்தைக்கு மீண்டு செல்லாமல் இங்கிருந்தபடியே) அருந்தவம் - செய்தற்கரிய தவத்தை; புரிதுமோ - செய்வோமோ? அன்னது அன்று எனின் - அவ்வாறு செய்ய இயலா விட்டால்; மருந்து அரும் கடு உண்டு - மாற்ற மருந்து எதுவுமில்லாத கொடிய நஞ்சைக் குடித்து; மாய்துமோ - இறந்து அழிவோமோ?திருந்தியது யாது - (இந்த இரண்டில்) தகுதியானது எதுவோ; அது செய்து தீர்தும் - அதைச் செய்து முடிப்போம்; என்று இருந்தனர் - என்ற சொல்லி (அந்த மகேந்திர மலையில்) இருந்தவர்கள் (யாவரென்றால்); தம் உயிர்க்கு - தம் உயிர்களுக்கும்; இறுதி எண்ணுவார் - ஒரு முடிவைக் கருதிய அந்த வானரவீர்கள். தவணை நாட்கள் கழிந்த பின்பும் சீதையைக் கண்டுபிடித்தலாகிய செயலை நிறைவேற்றாது கடுந்தண்டனைதரவுள்ள சுக்கிரீவனை எதிரில் செல்வதற்கு அஞ்சியவர்களாய் வானரர் இவ்வாறு எண்ணிக் கூறினார்கள் என்பது. மருந்து அரு நெடுங்கடு: முறிவில்லாத நஞ்சு; மாற்று மருந்தில்லாத பெரு நஞ்சு. இராமனின் தொண்டில் ஈடுபட்டும் அப் பணியை நிறைவேற்றாது உயிர் வாழ்வதைவிட, உயிர் விடுவதே மேல் என்று அந்த வானர வீரர்கள் கருதினார்கள் என்பது குறிப்பு. 5 |