உடன்வந்தவரிடம் அங்கதன் உரைத்தல்

4653. கரை பொரு கடல் அயல்,
      கனக மால் வரை
நிரை துவன்றிய என
      நெடிது இருந்தவர்க்கு,
'உரைசெயும் பொருள் உளது'
      என உணர்த்தினான் -
அரசு இளங் கோள்
      அரி, அயரும் சிந்தையான்:

     அரசு இளங் கோள் அரி - இளவரசனும் சிங்கம் போன்றவனுமான
அங்கதன்; அயரும் சிந்தையான் - வருந்திய மனத்தையுடையவனாய்; கரை
பொரு கடல் அயல் -
கரையை மோதுகின்ற அலை கடலுக்கு
அருகிலுள்ள மகேந்திர மலையில்; கனக மால் வரை - பெரிய
மேரு மலைகள்; நிரை துவன்றிய என - வரிசையாய் நெருங்கி நின்றன
என்று சொல்லும்படி; நெடிது இருந்தவர்க்கு - மிகுதியாக இருந்த வானர
வீரர்களுக்கு; உரை செயும் பொருள் - 'நான் கூறுவதற்குரிய செய்தி; உளது
என -
ஒன்று உண்டு' என; உணாத்தினான் - கூறலானான்.

     ஒவ்வொரு வானரனும் மேருமலை போன்றுள்ளான் என்பது.
வானரர்களைக் கனக மால்வரை நிரை துவன்றிய எனக் கூறியது
இல்பொருளுவமையாம்.  கனகமால் வரை உருவத்தால் வானரர்க்கு
உவமையாயிற்று.                                               6