4655.'   ''செய்தும்'' என்று அமைந்தது
     செய்த தீர்ந்திலம்;
நொய்து சென்று,
      உற்றது நுவலகிற்றலம்;
''எய்தும் வந்து'' என்பது
      ஒர் இறையும் கண்டிலம்;
உய்தும் என்றால், இது
      ஓர் உரிமைத்து ஆகுமோ?

     செய்தும் என்று - நாம் செய்வோம் என்று; அமைந்தது - ஏற்றுக்
கொண்ட செயலை; செய்து தீர்ந்திலம் - செய்து முடித்தோமல்லோம்;
நொய்து சென்று -
(குறித்த தவணைக் காலத்திற்குள்) விரைவாகத் திரும்பிச்
சென்று; உற்றது நுவலகிற்றிலம் - நிகழ்ந்த வரலாற்றைத் தெரிவிக்கவும்
வலியற்றவரானோம்; வந்து எய்தும் என்பது - (தவணை கடந்தாலும்) காரியம்
கைகூடும் என்பதை; ஓர் இறையும் கண்டிலம் - ஒரு சிறிதும்
அறிந்தோமில்லை (இப்படியிருப்பதால்); உய்தும் என்றால் - உயிரைப்
பிடித்துக் கொண்டு நாம் வாழ்வோமென்றால்; இது  - அவ்வாறு நாம்
உயிர்வாழும் செயல்; ஓர் உரிமைத்து ஆகுமோ - மேற்கொண்ட நட்புக்குத்
தகுதியான ஒரு செயலாகுமோ? (ஆகாது).

     நாம் எண்ணிவந்த செயல் முடிவதற்கு எந்த வகையிலும் சிறிதும்
வழியில்லை; தவணைக் காலத்திற்குள் மீண்டு சென்று சேர்தலும் முடியாது;
ஆகையால் உயிர்போக்குவதே உறுதியென்று அங்கதன் அறுதியிட்டான்
என்பது.  நுவலகிற்றிலம்: தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று; கில் -
ஆற்றலையுணர்த்தும் இறந்தகால இடைநிலை.  இறை: மிகச்சிறிய.       8