4656. | 'எந்தையும் முனியும்; எம் இறை இராமனும் சிந்தனை வருந்தும்; அச் செய்கை காண்குறேன்; நுந்துவென் உயிரினை; நுணங்கு கேள்வியீர்! புந்தியின் உற்றது புகல்விர் ஆம்' என்றான். |
எந்தையும் முனியும் - (செயலை முடிக்காமல் தவணை கடந்த பிறகு மீண்டு சென்றால்) என் தந்தையான மன்னனும் நம்மைக் கோபிப்பான்; எம் இறை இராமனும் - நம் தலைவனான இராமனும்; சிந்தனை வருந்தும் - மனம் வருந்துவான்; அச்செய்கை காண்குறேன் - அந்த நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணும் திறமுடையவனாகேன்; உயிரினை - ஆதலால் நான் என்னுயிரை; நுந்துவென் - வலிதில் மாய்த் துக் கொள்வேன்; நுணங்கு கேள்வியீர் - நுட்பமான நூற்கேள்வியுடைவர்களே! புந்தியின் உற்றது - உங்கள் அறிவில்பட்டதை; புகல்விர் - ஆராய்ந்து கூறுவீர்; என்றான் - என்று (அங்கதன்) சொன்னான். ஆம்: அசை. சுக்கிரீவன் கடுந்தண்டனைக்கும், இராமனின் பெரு வருத்தத்திற்கும் அஞ்சி அங்கே போகாமல் இங்கேயே உயிர்போக்குவது நல்லது என்று எண்ணுகிறேன்; இதைக் குறித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்களென்று அங்கதன் மற்றவர்களை வினாவினான் என்பது. நுந்துதல்: வலுவில் உயிர்போக்குதல். 9 |