4656.'எந்தையும் முனியும்; எம்
      இறை இராமனும்
சிந்தனை வருந்தும்; அச்
      செய்கை காண்குறேன்;
நுந்துவென் உயிரினை;
      நுணங்கு கேள்வியீர்!
புந்தியின் உற்றது புகல்விர்
      ஆம்' என்றான்.

     எந்தையும் முனியும் - (செயலை முடிக்காமல் தவணை கடந்த பிறகு
மீண்டு சென்றால்) என் தந்தையான மன்னனும் நம்மைக் கோபிப்பான்; எம்
இறை இராமனும் -
நம் தலைவனான இராமனும்; சிந்தனை வருந்தும் -
மனம் வருந்துவான்; அச்செய்கை காண்குறேன் - அந்த நிகழ்ச்சிகளைக்
கண்ணால் காணும் திறமுடையவனாகேன்; உயிரினை - ஆதலால் நான்
என்னுயிரை; நுந்துவென் - வலிதில் மாய்த் துக் கொள்வேன்; நுணங்கு
கேள்வியீர் -
நுட்பமான நூற்கேள்வியுடைவர்களே! புந்தியின் உற்றது -
உங்கள் அறிவில்பட்டதை; புகல்விர் - ஆராய்ந்து கூறுவீர்; என்றான் -
என்று (அங்கதன்) சொன்னான்.

     ஆம்: அசை. சுக்கிரீவன் கடுந்தண்டனைக்கும், இராமனின் பெரு
வருத்தத்திற்கும் அஞ்சி அங்கே போகாமல் இங்கேயே உயிர்போக்குவது
நல்லது என்று எண்ணுகிறேன்; இதைக் குறித்து உங்கள் கருத்தைச்
சொல்லுங்களென்று அங்கதன் மற்றவர்களை வினாவினான் என்பது.
நுந்துதல்: வலுவில் உயிர்போக்குதல்.                           9