4658.'மீண்டு இனி ஒன்று நாம்
      விளம்ப மிக்கது என்?
''மாண்டுறுவது நலம்'' என
     வலித்தனம்; -
ஆண் தகை அரசு
      இளங்குமர! - அன்னது
வேண்டலின், நின் உயிர்க்கு
      உறுதி வேண்டுமால்.'

     ஆண்தகை அரசு இளங்குமர - (மேலும் சாம்பவான் அங்கதனை
நோக்கி) ஆடவரிற் சிறந்த இளவரசனான அங்கதனே!மீண்டு - திரும்பிச்
சென்று; இனி நாம் - இனிமேல் நாங்கள்; ஒன்று விளம்ப மிக்கது என் -
சொல்லக் கூடிய செய்தி என்ன உள்ளது? (ஒன்றுமில்லை); மாண்டு உறுவது -
(ஆதலால்) நாங்கள் இறந்து விடுவதே; நலம் என வலித்தனம் - நல்லதென்று
உறுதி கொண்டோம்; அன்னது வேண்டலின் - அவ்வாறு இறந்து போவதை
(நாங்கள்) விரும்பினபடியால்; நின் உயிர்க்கு உறுதி வேண்டும் - உனது
உயிர் அழியாமல் இருக்க வேண்டும்.

     சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க மாட்டாமல் நாங்கள் மீண்டுபோய்ச்
சொல்வதற்கும் ஒன்றுமில்லை; ஆதலால், நாங்கள் இறந்து விடுவதே
தகுதியென்று தோன்றுகிறது; இளவரசனாயிருப்பதால் நீ உயிருடன் வாழ்வது
மிக இன்றிமையாததாகுமென்று சாம்பவான் கூறினான் என்பது.  ஆல்: ஈற்றசை.
                                                             11