அங்கதன் மறுமொழி 4659. | என்று அவன் உரைத்தலும், இருந்த வாலி சேய், 'குன்று உறழ்ந்தென வளர் குவவுத் தோளினீர்! பொன்றி நீர் மடிய, யான் போவெனேல், அது நன்றதோ? உலகமும் நயக்கற்பாலதோ? |
என்று அவன் உரைத்தலும் - இவ்வாறு சாம்பவான் கூறியதும்; இருந்த வாலி சேய் - அதனைக் கேட்டிருந்த வாலி மகனான அங்கதன்; குன்று உறழ்ந்தென - மலைகள் ஒப்பானவை என்று சொல்லும்படி; வளர் குவவுத் தோளினீர் - வளர்ந்துள்ள திரண்டு தோள்களையுடையவர்களே!நீர் பொன்றி மடிய - நீங்கள் யாவரும் இங்கே இறந்தொழிய; யான் போவனேல் - நான்மட்டும் உயிரோடு தனியே திரும்பிப் போவேனானால்; அது நன்றதோ - அச் செயல் நல்லதாகுமோ?உலகமும் - உலகில் வாழும் சான்றோராலும்; நயக்கற்பாலதோ - விரும்பத் தக்கதாகுமோ? (ஆகாது). நன்றது: 'அது' பகுதிப் பொருள் விகுதி. 'நீங்கள் அனைவரும் மடிய நான் மட்டும் திரும்பிச் செல்வது நல்லதா? அதை உலகத்தவர்தான் விரும்புவார்களோ?' என்று அங்கதன் கேட்டான் என்பது. 12 |