அறுசீர் ஆசிரிய விருத்தம் 4661. | 'எல்லை நம் இறுதி, யாய்க்கும் எந்தைக்கும், யாவரேனும் சொல்லவும் கூடும்; கேட்டால், துஞ்சவும் அடுக்கும்; கண்ட வில்லியும் இளைய கோவம் வீவது திண்ணம்; அச் சொல் மல்லல் நீர் அயோத்தி புக்கால், வாழ்வரோ பரதன் மற்றோர்? |
(நாம் எல்லோரும் இங்கே இறந்துவிட்டால்) நம் இறுதி எல்லை - இறத்தலாகிய நமது முடிவுச் செய்தியை; யாய்க்கும் - என்தாயாகிய தாரைக்கும்; எந்தைக்கும் - என் சிறிய தந்தையான சுக்கிரீவனுக்கும்; யாவரேனும் - யாரேனும் ஒருவர்; சொல்லவும் கூடும் - போய்ச் சொல்லவும் இடம் ஏற்படும்; கேட்டால் - (அதனைக்) கேட்டறிந்தால்; துஞ்சவும் அடுக்கும் - அவர்கள் மாண்டுபோகவும் கூடும்; கண்ட - (அத்துயர நிகழ்ச்சியை) நேரில் பார்த்த; வில்லியும் - வில் வீரனான இராமபிரானும்; இளைய கோவும் - இளைய பெருமாளான இலக்குவனும்; வீவது திண்ணம் - இறந்துபோவது உறுதி; அச்சொல் - (இராமலக்குவர் இறந்த) அந்தச் செய்தி; மல்லல் நீர் அயோத்தி புக்கால் - வளம் பொருந்திய நீர் நீறைந்த அயோத்தி நகருக்கு எட்டினால்; பர தன் மற்றோர் - பரதனும் அங்குள்ள மற்றவரும்; வாழ்வரோ - உயிர் வாழ்வார்களோ? நமது முடிவைத் தாரையும சுக்கிரீவனும் மற்றவரால் அறிவார்கள். அதனால் அவர்க்கும் இராமலக்குவர்க்கும், பரதன் முதலியோர்க்கும் மரணமுண்டாகலாம் என வருந்தினான் அங்கதன் என்பது. 'சாதலை'த் 'துஞ்சுதல்' என்றது மங்கலவழக்கு. 14 |