சாம்பவான் அங்கதனை நோக்கிக் கூறல்

4663.பொருப்பு உறழ் வயிரத் திண் தோள்
      பொரு சினத்து ஆளி போல்வான்
தரிப்பு இலாது உரைத்த மாற்றம்,
      தடுப்ப அருந்தகைத்தது ஆய
நெருப்பையே விளைத்த போல,
      நெஞ்சமும் மறுகக் கேட்டு,
விருப்பினால் அவனை நோக்கி,
      விளம்பினன் எண்கின் வேந்தன்:

பொருப்பு உறழ் - மலையையொத்த; வயிரத் திண் தோள் - உறுதியான
வலிய தோள்களையுடைய; பொரு சினத்து ஆளி போல்வான் - போர்
புரியும் கடுங்கோபத்தைக் கொண்ட சிங்கம் போன்றவனாகிய அங்கதன் -
தரிப்பு இலாது -
மனம்பொறாமல்; உரைத்த மாற்றம் - சொன்ன சொற்கள்;
தடுப்ப அருந் தகைத்ததாய -
தடுக்க முடியாத தன்மை பொருந்திய;
நெருப்பையே விளைத்த போல -
பெருந்தீயை மூட்டியது போல;
நெஞ்சமும் மறுக -
மனத்தையும் கலங்கச் செய்ய; கேட்டு - (அதனைக்)
கேட்டு; எண்கின் வேந்தன் - கரடிகளின் அரசனான சாம்பவான்;
விருப்பினால் அவனை நோக்கி -
அன்போடு அந்த அங்கதனைப் பார்த்து;
விளம்பினான் -
கூறலானான்.

     யாளி என்பது ஆளி என்றாயிற்று.                             16