4665. | 'ஏகு நீ; அவ் வழி எய்தி, இவ் வழித் தோகையைக் கண்டிலா வகையும் சொல்லி, எம் சாகையும் உணர்த்துதி; தவிர்தி சோகம்; - போர் வாகையாய்!' என்றனன் - வரம்பு இல் ஆற்றலான். |
வரம்பு இல் ஆற்றலான் - எல்லையற்ற ஆற்றல் கொண்ட சாம்பவான் (அங்கதனை நோக்கி); போர் வகையாய் - போரில் வெற்றி வெறும் ஆற்றலுடையவனே!ஏகு நீ - நீ (உயிருடன்) போவாயாக; அவ்வழி எய்தி - (இராமனும் சுக்கிரீவனும் இருக்கின்ற) அந்த இடத்தைச் சேர்ந்து; இவ் வழி - இந்த இடமெங்கும்; தோகையைக் கண்டிலா வகையும் - மயில் போன்ற சீதையை நாம் காணமுடியாத திறத்தையும்; சொல்லி - தெரிவித்து; எம் சாகையும் உணர்த்துதி - எங்களது மரணச் செய்தியையும் தெரிவிப்பாய்; சோகம் தவிர்தி - வருந்துவதை விடு; என்றனன் - என்று கூறினான். செய் அல்லது செத்துமடி என்பது உண்மை வீரருக்கு இலக்கு; பிராட்டியின் இருப்பிடம் காணவியலாமையால் தாங்கள் உயிர்விடுதலே வீரமாகும். எனவே, 'சோகம் தவிர்தி' என்றான். சாகை - சாவு. தோகை: உவமையாகுபெயர். 18 |