4667. | பின்னரும் கூறுவான்: 'பிலத்தில், வானத்தில், பொன் வரைக் குடுமியில், புறத்துள் அண்டத்தில், நல் நுதல் தேவியைக் காண்டும் நாம் எனின், சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமோ? |
பின்னரும் கூறுவான் - அனுமன் மேலும் சொல்லுவான்; பிலத்தில் - பாதாள உலகத்திலும்; வானத்தில் - தேவருலகத்திலும்; பொன் வரைக் குடுமியில் - பொன்மலையான மேரு மலைச் சிகரத்திலும்; புறத்துள் அண்டத்தில் - மற்றும் அப்பாலுள்ள அண்டங்களிலும்; நன்னுதல் தேவியை- அழகான நெற்றியையுடைய சீதையை; நாம் காண்டும் எனில் - நாம்தேடிக் காண்போமானால்; இறைவன் - (நம்) அரசனான சுக்கிரீவன்; சொன்னநாள் அவதியை - நமக்குக் குறித்த தவணை நாட்களில் எல்லை கடந்ததைப்பற்றி; சொல்லுமோ - குற்றமாக எடுத்துக் கூறுவானோ? ஓ: வினா இடைச் சொல். சீதையைத் தேடிக் காண்பது இன்றிமையாத தொழிலாதலால் தவணை நாள் கடந்தமைக்குச் சிறிதும் கலங்காது நாம் மேற்கொண்ட செயலில் ஊக்கங்கொள்வதுதான் தக்கது; அவ்வாறு அச் செயலை நாம் சிறப்பாகச் செய்து முடித்தால் சுக்கிரீவன் நம் செயலைப் பாராட்டுவனேயல்லாமல் ஒரு நாளும் கண்டிக்கவே மாட்டான் என்று அவ் வானரர்க்கு அனுமன் எடுத்துரைத்தான். 20 |