4670.'முறையுடை எம்பியார் முடிந்தவா' எனாப்
பறையிடு நெஞ்சினன், பதைக்கும் மேனியன்,
இறையுடைக் குலிசவேல் எறிதலால், முனம்
சிறை அறு மலை எனச் செல்லும் செய்கையான்;

     முறையுடை எம்பியார் முடிந்த ஆ - நீதிமுறையைத் தனக்கு
உரிமையாகவுடைய என் தம்பி சடாயு இறந்தவாறு என்னே!எனா - என்று;
பறை இடு நெஞ்சினன் -
பறையடிப்பது போலத்துடிக்கின்ற
நெஞ்சையுடையவனும்; பதைக்கும் மேனியன் - தவித்துத் துடிக்கும்
உடம்பையுடையவனும்; இறையுடைக் குலிசம் வேல் எறிதலால் -
தேவேந்திரன் தன் வச்சிரப் படையை வீசியெறிந்ததால்; முனம் சிறை அறும்
மலை என -
முற்காலத்தில் சிறகுகள் அறுபட்டுப்போன மலையைப் போல;
செல்லும் செய்கையான் -
செல்லும் செயலையுடையவனானான்.

     முற்காலத்தில் மலைகள் இறகுள்ளனவாயிருந்து பறந்த மக்களின்மேல்
விழுந்து அழித்ததால், இந்திரன் அவற்றின் சிறகுகளை அரிந்தான் என்பது
புராணக் கதை.  சிறகுகள் அறுபட்ட மலை சிறகுகள் கரிந்துவிட்ட சம்பாதிக்கு
ஏற்ற உவமையாம்.

     எம்பியார் - பால்வழுவமைதி (பாசத்தால் வந்தது); தம்பி
இளையவனாதலால் எம்பி என்று இருப்பது முறை; 'ஆர் என்ற மரியாதைப்
பன்மை விகுதி சேர்த்து வழு; தம்பியை நினைத்த பாசத்தால் எம்பியார் என
அமைந்தது.                                                    23