4675. | வெங் கதம் வீசிய மனத்தன், விம்மலன், பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன், சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை, இங்கித வகையினால், எய்த நோக்கினான். |
(அனுமன் சம்பாதியை மேலும் நோக்கி) வெங்கதம் வீசிய மனத்தன் - கொடிய கோபத்தை நீக்கிய மனத்தையுடையவனும் ; விம்மலன் - (துக்கத்தால்) பொருமுகின்றவனும்; பொங்கிய சோரி நீர் பொழியும் - பொங்கும் மழைபோல நீரைச் சொரிகின்ற; கண்ணினன் - கண்களையுடையவனுமாயிருக்கின்றான் (ஆதலால், இவன்); சங்கையில் சழக்கு இலன் - மனத்திலே சிறிதும் குற்றம் இல்லாதவன்; என்னும் தன்மையை - என்பதை; இங்கித வகையினால் - முகத்தின் குறிப்புகளினால்; எய்த நோக்கினான் - நன்றாக அறிந்து கொண்டான். அனுமன், பிறர் முகக் குறிப்பறிந்து உண்மையையுணர்பவனாதலால், சீற்றமில்லாமலும், துயரத்தால கண்ணீரைப் பெருக்கியும் வருகின்ற சம்பாதியைக் கண்டு அவன் குற்றமறறவன் என்பதைத் தெளிந்தான் என்பது. இங்கித வகை: குறிப்பால் உணருந் தன்மை. சங்கை: மனம்; சழக்கு: குற்றம். 28 |