அனுமன், சடாயு இறந்தமை உரைத்தல்

4679. கூறிய வாசகம் கேட்ட, கோது இலான்
ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா
ஏறினன், உணர்த்தினன், 'இகல் இராவணன்
வீறிய வாளிடை விளிந்தது ஆம்' என்றான்.

     கூறிய வாசகம் கேட்ட - சம்பாதி சொன்னவற்றைக் கேட்ட; கோது
இலான் -
குற்றமற்றவனான அனுமன்; ஊறிய துன்பத்தின் உவரியுள்புகா -
மிக்க துன்பமாகிய கடலினுள் மூழ்கி; ஏறினான் - அதிலிருந்து ஒருவாறு
கரையேறினவனாகி; இகல் இராவணன் - (சடாயுவோடு) போர் புரிந்த
இராவணன்; வீறிய வாளிடை - வீசிய வாளினால்; விளிந்தது ஆம் - உன்
தம்பியின் மரணம் நேர்ந்ததாகும்; என்றான் உணர்த்தினன் - என்று
தெரிவித்தான்.

     சம்பாதியின் சொல் மனத்தைக் கரையச் செய்ததால் அதைக் கேட்ட
அனுமன் துயர்க் கடலிலே மூழ்கிப்பின் ஒருவாறு தெளிந்தான் என்பது.

     வீறிய வாள்: இராவணனுக்குச் சிவன் தந்த சந்திரகாசமென்னும் வாள்;
எனவே, பிறிதொன்றற்கு இல்லாத சிறப்புடையது.

     புகா:  செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.               32