சம்பாதி புலம்பல்

4680. அவ் வுரை கேட்டலும், அசனி ஏற்றினால்
தவ்விய கிரி எனத் தரையின் வீழ்ந்தனன்;
வெவ் உயிரா உயிர் பதைப்ப, விம்மினான்;
இவ் உரை, இவ் உரை, எடுத்து இயம்பினான்:

     அவ் உரை கேட்டலும் - (அனுமன் கூறிய) அந்தச் சொற்களைக்
கேட்டதும் (சம்பாதி); அசனி ஏற்றினால் - பேரிடியினால்; தவ்விய கிரி
என-
சிதைந்த மலை போல; தரையில் வீழ்ந்தனன் - தரைமீது விழுந்தான்;
வெவ் உயிரா -
வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு; உயிர் பதைப்ப - உயிர்
துடிக்க; விம்மினான் - தேம்பி வருந்தியவனாகி; இவ்உரை இவ்உரை - இந்த
இந்தச் சொற்களை; எடுத்து இயம்பினான் - எடுத்து எடுத்துச் சொல்லிப்
புலம்பினான்.

     ஏறு: சிறந்ததையும், பெரியதையும் 'ஏறு' என்றல் மரபு.  கீழே விழுதலும்,
வெப்பமாகப் பெருமூச் செறிதலும், உயிர் பதைத்தலும், விம்முதலும் துயரத்தின்
மெய்ப்பாடுகள்.  இவ்வுரை இவ்வுரை என்ற அடுக்கு: சோகத்தின் பலவற்றைக்
கூறுவதைக் குறிக்கும்.

     தவ்வுதல்:சிதைதல்.                                         33