கலிவிருத்தம் (வேறு)

4681.'விளையா நீள் சிறகு இன்றி வெந்து உகத்
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால்;
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு
இளையானே! இது என்ன மாயமோ?

     விளையா நீள் சிறகு இன்றி - (என் தம்பியே) எதற்கும் தடைபடாத
என்னுடைய நீண்ட சிறகுகள் இல்லாமல்; வெந்து உக - (சூரியக் கதிர்களால்)
அடியோடு வெந்தொழிய; தளை ஆனேன் - (விரும்பியபடி பறந்து செல்ல
முடியாமல்) தளைப்படுத்தப்பட்டுள்ள எனது; உயிர் போதல் தக்கது - உயிர்
நீங்குதலே தகுதியானது; வளையா நேமியன் - கோணாத ஆணைச்
சக்கரத்தையுடைய தசரத மன்னனின்; வன்மை சால் வலிக்கு - மிகந்த
உக்கிரமான வலிமைக்கு; இளையோனே - குறையாத ஆற்றலுடையவனே!
இது என்ன மாயமோ -
(நீ இறந்த) இச் செய்கை என்ன மாயமோ? (அறிய
முடியவில்லையே).

     ஆல்: ஈற்றசை, தேற்றமும் ஆம்.

     பறவைகளுக்கு மிகத் தேவையான உறுப்பாகிய சிறகுகளை இழந்த
பின்பும் ஒரு பயனுமில்லாமல் நான் உயிருடன் வீணே விழுந்து கிடக்கின்றேன்;
ஆனால், தசரத மன்னனது வலிமைக்கும் குறையாத வலிமையுள்ள நீ
மூத்தவனான எனக்கு முன்னே இறந்தது என்ன மாயம்' என்று சம்பாதி
புலம்பினான்.

     பூமி முழுவதும் வளையாத ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி ஆட்சி
செய்தவனாதலால் தசரதன் 'வளையா நேமியன்' எனப்பட்டான்.

     ஓகாரம் இரக்கமுணர்த்தும், வளையா நேமியன் என்பதற்குத் திருமால்,
சூரியன் என்று பொருள் கொண்டவரும் உளர்.                      34