4682.'மலரோன் நின்றுளன்; மண்ணும்
      விண்ணும் உண்டு;
உலையா நீடு அறம்
      இன்னும் உண்டுஅரோ;
நிலை ஆர் கற்பமும்
      நின்றது; இன்று நீ
இலையானாய்; இது
      என்ன தன்மையோ?

     மலரோன் நின்றுளன் - (திருமாலின் நாபித்) தாமரை மலரில்
தோன்றியவனான பிரமன் இன்னும் அழியாது இருக்கின்றான்; மண்ணும்
விண்ணும் உண்டு -
பூமியும் வானமும் உள்ளன; உலையா நீடு அறம் -
அழியாது வளரும் தருமமும்; இன்னும் உண்டு - இன்னும் நிலைபெற்றுள்ளது;
நிலை ஆர் கற்பமும் -
நிலை பொருந்திய பிரமகற்பம் என்ற காலமும்;
நின்றது -
இன்னும் முடிவடையாது உள்ளது (ஆனால்) இன்று நீ இலை
ஆனாய் -
இன்றோ நீ மாத்திரம் இல்லாது அழிந்தாய்; இது என்ன
தன்மையோ -
இது என்ன முறையோ?

     அரோ: ஈற்றசை

     நீண்ட ஊழிக் காலம் வரை நிலைத்தற்குரிய நீ இறந்தாயே எனச் சம்பாதி
இரங்கியவாறு.  பிரமனும், மண்ணும், விண்ணும், அறமும், கற்ப காலமும்
அழியுமானால் நீயும் அழிவது நியாயமாகும்; அவை அழியாதிருக்க நீ மட்டும்
அழிந்தது முறையாகாது என்பது சம்பாதி கருத்து.

     ஓகாரம்: எதிர்மறை; ஐயமும் ஆம்.

     கற்பம்: பிரமகற்பம்.                                        35