4687.'எம் கோமான், அவ் இராமன், இல் உளாள்,
செங்கோலன் மகள், சீதை செவ்வியாள்,
வெங் கோல் வஞ்சன் விளைத்த மாயையால்,
தம் கோனைப் பிரிவுற்ற தன்மையாள்;

     எம் கோமான் அவ்இராமன் - (அது கேட்ட அனுமன்) எங்கள்
தலைவனாகிய அந்த இராமபிரானின்; இல் உளாள் - மனைவியாக
இருப்பவளும்; செங்கோலன் மகள் - நீதி தவறாத ஆட்சியையுடைய
சனகமன்னன் திருமகளும்; செவ்வியாள் - நல்லிலக்கணங்களும் பண்பும்
நிறைந்தவளுமான; சீதை - சீதையானவள்; வெங்கோல் வஞ்சன் -
கொடுங்கோலையுடைய வஞ்சகனான இராவணன்; விளைத்த மாயையால் -
செய்த சூழ்ச்சியால்; தன் கோனை - தன் நாயகனான அந்த இராமபிரானை;
பிரிவுற்ற தன்மையாள் -
பிரிந்த தன்மையையுடைவளானாள்.

     வெங்கோல் வஞ்சன் விளைத்த மாயை: மாயமான் காரணமாக இராம
இலக்குவர் சீதையைப் பிரியுமாறு செய்தது.

     இல் உளான்: வீட்டிலிருந்து கணவனுக்கு வேண்டிய தொழிலைச்
செய்பவள்; மனைவி - இடவாகுபெயர்.                            40