4688. | 'கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனைக் கண்டான் நும்பி; அறம் கடக்கலான், ''வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு'' எனா, திண் தேரான் எதிர் சென்று சீறினான். |
கொண்டு ஏகும் - சீதையைக் கவர்ந்து செல்லும்; கொலை வாள் அரக்கனை - கொலை செய்யும் வாளேந்திய இராவணனை; நும்பி கண்டான்- உன் தம்பி பார்த்தான்; அறம் கடக்கலான் - தருமநெறி தவறாதவனான அவன்; வண்டு ஆர் கோதையை - வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய அச் சீதையை; வைத்து நீங்கு - விட்டுவிட்டு அப்பாலே செல்; எனா - என்று கூறி; திண்தேரான் எதிர் சென்று -வலிய தேரையுடைய அந்த இராவணன் எதிரே சென்று; சீறினான் - மனங் கொதித்து எதிர்த்தான். அறங் கடக்கலான்: இந்த அடைமொழி பிறர் மனைவியைக் கவர்வதைக் கண்டு மனங்கொதிப்பதற்கு ஏற்றவன் என்ற கருத்தைப் புலப்படுத்தும். அறங் கடவாத சடாயுவை அறநெறி நின்றுளோர்க் கெலாம் மாணியை' - (3449) என முன்னும் கூறினார். சொல்லிய அறநெறி தொடர்ந்து தோழமை நல்லியல் அருங்கடன் கழித்த நம்பியை' - (3451) என்றதும் காண்க. கண்டான்:முற்றெச்சம். 41 |